மின்னிலக்கமயமாதல், சுகாதாரப் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் வலுவாக இருப்பதாக உலகப் பொருளியல் மன்றம் (டபிள்யூஇஎஃப்) தெரிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் 'உலகப் போட்டித்தன்மை அறிக்கை'யை வெளியிட்டு வரும் உலகப் பொருளியல் மன்றம், முதன்முறையாக இவ்வாண்டு அந்த நடைமுறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. மாறாக, ஒரு நாட்டின் எதிர்காலப் பொருளியல் உருமாற்றத்திற்கு வித்திடும் அம்சங்கள் மீது அது தன் கவனத்தைத் திருப்பி உள்ளது.
அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டிய 11 துறைகளை அடையாளம் கண்டு, சிறப்பு வருடாந்திர அறிக்கையை மன்றம் நேற்று வெளியிட்டது.
வலுவான சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பையும் துடிப்பான சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளையும் கொண்டுள்ளதால், சிங்கப்பூர் போன்ற மின்னிலக்கரீதியாக முன்னேறிய நாடுகள் கொவிட்-19 நோய்ப் பரவல் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் நல்ல நிலையில் உள்ளன என அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கேற்ற உயர்கல்வி முறையைக் கொண்டுள்ளதால் மனித மூலதன வளர்ச்சியில் நூற்றுக்கு 79 புள்ளிகளைப் பெற்று சிங்கப்பூரும் பின்லாந்தும் 2ஆம் இடத்தில் உள்ளன.
சிங்கப்பூர், தைவான், பின்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை வலுவான நிதிநிலையைக் கொண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
துடிப்பான மின்னிலக்கச் சட்ட அமைப்பைக் கொண்டுள்ள முதல் பத்து நாடுகளில் சிங்கப்பூருக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் மின்னிலக்கத் தேர்ச்சிகளிலும் சிங்கப்பூர் ஆறாம் இடத்தைப் பிடித்தது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் முதல் 30 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

