எஸ்ஜிஒற்றுமை வேலைகள், திறன்கள் தொகுப்புத் திட்டத்தின்கீழ், இவ்வாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஆறு மாத காலத்தில், வேலை தேடிய உள்ளூர்வாசிகளில் ஏறத்தாழ 60,000 பேருக்கு வேலை, பயிற்சி வாய்ப்புகள் கிட்டின.
அவர்களில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், அதாவது கிட்டத்தட்ட 47,000 பேர் வேலையில் அமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 40,000 பேருக்கு வேலை பெற்றுத் தரவேண்டும் என்று தேசிய வேலைகள் மன்றம் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் பத்தில் அறுவருக்கு, அதாவது 27,280 பேருக்கு நீண்டகால வேலை கிடைத்ததாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட, இவ்வாண்டின் இறுதி வேலை நிலவர அறிக்கை தெரிவித்தது.
நீண்டகால வேலை பெற்றோரில் 56%, 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள். குறுகிய கால வேலைகளில் அமர்த்தப்பட்டோரில் 42 விழுக்காட்டினர் 'பிஎம்இடி' பிரிவினர்.
வேலை தேடிய நாற்பது வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு வேலை கிடைத்தது என்று அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன், வேலை தேடிய அவ்வயதுப் பிரிவினரில் 35 விழுக்காட்டினர், நிறுவனங்கள் வழங்கிய வேலைப் பயிற்சி, இணைப்புத் திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் போன்ற வழிகளில் பலனடைந்தனர்.
இந்நிலையில், "இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. இது கொண்டாடுவதற்கான தருணமில்லை என்றபோதும், ஓரளவிற்கு வலுவாகக் காலூன்றி இருக்கிறோம் எனும் நிலையை எட்டி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. எங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கி, முடிந்த அளவிற்கு அதிகமான நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவ விரும்புகிறோம்," என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியிருக்கிறார்.
'யுஓபி' வங்கிக்கு நேற்று சென்றிருந்தபோது ஊடகத்தினரிடம் பேசிய திருவாட்டி டியோ, வேலைவாய்ப்புச் சந்தையை நிலைப்படுத்த உதவ எடுத்த நடவடிக்கைகளுக்காக மனிதவள அமைச்சு, என்டியுசி, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்புப் பங்காளித்துவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இன்னும் 123,000க்கும் மேற்பட்ட வேலை, பயிற்சி வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொடர்பு (21,000), உணவு சேவைகள் (11,300), நிபுணத்துவ சேவைகள் (11,000), உற்பத்தி (10,800), சுகாதாரப் பராமரிப்பு (7,200) ஆகிய துறைகளில் அதிகமான வேலை, பயிற்சி வாய்ப்புகள் இருக்கின்றன.

