மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் உதவி நாடுவதில் சங்கடங்களை எதிர்நோக்கக்கூடிய மாணவர்களுக்குப் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து தருவதில் கல்வி நிலையங்கள் மேலும் பங்காற்ற முடியும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரிக்கு வருகை அளித்த அதிபர், தங்களுயை மனநலப் பிரச்சினைகளை விரிவுரையாளர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் எடுத்துச் சொல்லும் துணிவு மாணவர்களிடையே இல்லாமல் இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
அல்லது தங்கள் பிரச்சினையை வெளியே சொன்னால் தங்களுக்கு சங்கடமான நிலை ஏற்படும் என்று மாணவர்கள் நினைக்கக்கூடும்.
இத்தகைய மாணவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய தேவை உள்ளதாக அதிபர் கூறினார்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் தனக்கு மனநலப் பிரச்சினை இருப்பதை உணர்ந்துகொண்டு அதற்கு உதவி கிடைக்கும் என்பதால் வழக்கமாக கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை மாணவரிடையே ஏற்படும் என்று அதிபர் தெரிவித்தார்.
ரிபப்ளிக் தொழிற்கல்லூரியின் மாணவர் பராமரிப்பு நிலையத்தைப் பார்வையிட்ட அவர், ஊடகத்திடம் பேசினார். மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள, சிறப்புக் கல்வி உதவி தேவைப்படக்கூடிய மாணவர்களுக்கு உதவும் அந்த நிலையம், 208 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. அது புதுப்பிக்கப்பட்டு சென்ற ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
அந்த நிலையத்தில் இரண்டு மாநாட்டு அறைகள் உள்ளன. ஆலோசனை அறைகள் ஐந்து இருக்கின்றன. தொழில்நுட்ப உதவி நூலகம் ஒன்றும் உள்ளது. சிறப்பு உதவி தேவைப்படக்கூடிய மாணவர்கள் அங்கு பல சாதனங்களைப் பெற்று பயன் அடைய முடியும்.
அந்த நிலையத்தில் இரண்டு பிரத்தியேக அறைகளும் இருக்கின்றன. மனப் பதற்றம் காரணமாகவும் பயம் காரணமாகவும் பாதிக்கப்பட்டு உள்ள மாணவர்கள் மனம் அமைதி அடைய அந்த அறைகள் உதவும். அதிபர் ஹலிமா, அக்கல்லூரியின் வேளாண்மைத் தொழில்நுட்பப் பரிசோதனைக் கூடத்தையும் சுற்றிப் பார்த்தார்.

