மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆறு சந்தேகப்பேர்வழிகள் பிடிபட்டனர்.
அவர்களில் மூன்று பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள். கைதானவர்களுக்கு வயது 28 முதல் 55 வரை என்று இந்தப் பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மொத்தம் சுமார் 4,158 கிராம் கஞ்சா, 466 கிராம் ஹெராயின், 999 கிராம் ஐஸ், 753 கிராம் கெட்டமின், 105 எக்ஸ்டசி மாத்திரைகள், 285 எரிமின்-5 மாத்திரைகள் உள்ளிட்ட பலவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு $475,000க்கும் அதிகம் என்று அறிக்கை குறிப்பிட்டது. பிடிபட்ட சந்தேகப்பேர்வழிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆபத்தான ஆயுதங்களும் பல்வேறு போதைப்பொருள் சாதனங்களும் பிடிபட்டதாகவும் இந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாசிர் ரிஸ் டிரைவ் 3, பீச் ரோடு, மெக்பர்சன் பகுதியில் இருக்கும் கடை வீடு, ஆர்ச்சர்ட் பொலிவார்ட், டர்விட் ரோடு, அங் மோ கியோ ஆகிய இடங்களில் சந்தேகநபர்கள் சிக்கினர்.
பிடிபட்ட கஞ்சா, 595 பேரை அடிமையாக்கிவிடும் அளவுக்கு இருந்தது. அதேபோல, 220 புழங்கிகளுக்குப் போதுமான ஹெராயினும் 570 புழங்கிகளுக்கு ஈடான ஐஸ் போதைப்பொருளும் பிடிபட்டு இருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

