சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் பொய்த் தகவல் அளித்த குற்றத்திற்காக துணை குத்தகை நிறுவனத்தின் இயக்குநர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மின்சாரம் மற்றும் உலோகம் தொடர்பான வேலைகளை மேற்கொண்டு வரும் ஹோ சின் என்னும் துணைக் குத்தகை நிறுவனத்தின் இயக்குநரான லா யு ஹோங், 53, என்பவருக்கு பத்து நாள் சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டன. இவ்வகை குற்றத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க உற்பத்தித்திறன் திட்டம் ஒன்றின் தொடர்பில் மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதற்காக $38,400 தண்டத்தொகையும் அவருக்கு விதிக்கப்பட்டது. இது அவர் மோசடி செய்ய முயன்ற தொகையைக் காட்டிலும் இருமடங்கு.
முன்னதாக, விசாரணையின்போது சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் பொய்த் தகவல் அளித்த குற்றத்தை அந்த சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டார்.
உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்க உதவித் திட்டம் மூலம் ரொக்க உதவி பெறுவதற்கான ஆணையத்தின் விண்ணப்ப பதிவில் பொய்த் தகவலை தந்ததன் மூலம் அவர் வேலை செய்து வந்த ஹோ சின் நிறுவனத்தையும் ஏமாற்றியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இவரது குற்றம் இவ்வாண்டு மார்ச் மாதம் மோசடிக் குற்றங்களுக்காக 46 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இங் சியாவ் சாய், 47, என்பவருடன் தொடர்புடையது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2013 மார்ச் மாதத்துக்கும் 2016 ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் $2.7 மில்லியனைப் பெற 83 வர்த்தகங்களுக்கு இங் மோசடி விண்ணப்பங்களை சமர்ப்பித்ததற்காக அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தித் திறன், புத்தாக்க நிதி உதவிக்கு தகுதிபெறாதவை என பின்னர் கண்டறியப்பட்டது.

