உடற்குறை உள்ளோருக்கு உதவும் செயல்திட்டங்களை ஆதரிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான பொது விழிப்புணர்வுக்கு நிதியளிப்பது ஆகிய இரட்டை நோக்கம் கொண்ட புதிய $25 மில்லியன் நடவடிக்கை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
திறன்மிகுந்த வாழ்வுத் திட்டம் (இஎல்ஐ) என்னும் அந்த நடவடிக்கை, எஸ்ஜி எனேபிள், பந்தயப்பிடிப்புக் கழகம் ஆகியவற்றின் பங்காளித்துவத்தில் உருவாகி உள்ளது. 2024ஆம் ஆண்டு வரை இத்திட்ட நடவடிக்கை நடப்பில் இருக்கும். ஏற்கெனவே 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டோட் போர்ட் திறன்மிகுந்த வாழ்க்கைத் திட்டத்தின் அடுத்தகட்டம் இது.
புதிய நடவடிக்கையின்கீழ் மானியம் அளிக்கும் பொருட்டு $20 மில்லியன் தொகையை வழங்க பந்தயப் பிடிப்புக் கழகம் கடப்பாடு கொண்டுள்ளது. இதிலிருந்து $5 மில்லியன் தொகை பொது விழிப்புணர்வு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும். இத்துடன், சமூக உண்டியல் அமைப்பு வழிநடத்தும் 'கேர் அண்ட் ஷேர்' பிரசார இயக்கம் பொது விழிப்புணர்வு முயற்சி களுக்கு $1.196 மில்லியன் வழங்கி இணை ஆதரவு அளிக்கும்.
லெங்கோக் பாருவில் 'எனேபிளிங் வில்லேஜ்' என்னும் உடற்குறை உள்ளோருக்கான சமூக வெளிப் பகுதியில் புதிய நடவடிக்கை தொடங்கிவைக்கப்பட்ட நிகழ்வில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
புதிய நடவடிக்கை, அக்கறையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் சிங்கப்பூரின் தொடர்முயற்சிகளில் மேலும் ஒரு மைல்கல் என்று திரு மசகோஸ் அப்போது குறிப்பிட்டார்.
"இந்த நடவடிக்கை வடிவம் பெற உடற்குறை உள்ளோரைக் கவனிக்கும் துறை எடுத்து வரும் முயற்சிகளோடு கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொருவரும் இதில் பங்காற்றி உள்ளனர்.பொதுவான நோக்கத்தைப் பகிர்ந்துகொள்வதன் வழி பன்முக சமூகப் பங்காளிகளை நாம் பெறலாம்.
"ஒவ்வொரு பங்காளியும் வெவ்வேறு திறன்களையும் வளங்களையும் கொண்டவர்கள். வலுவான, எல்லோரையும் உள்ளடக்கும் தன்மையைப் பேணுவதற்கான தீர்வுகளைக் காண இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்," என்றார் அவர்.
புதிய இஎல்ஐ மானியம் பெறுவதற்கு 2021 ஏப்ரல் முதல் விண்ணப்பிக்கலாம். மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும் திட்டங்களை ஆதரிப்பதற்கான மானியம் இது. தனியாக வாழ்தல், திறன்களை கண்டுணர்தல், சமூகங்களை ஒன்றிணைத்தல் ஆகிய அம்சங்கள் அவை. உடற்குறை உள்ளோருக்குப் பயனளிக்கும் புத்தாக்கங்களை உருவாக்கவும் அவர்களின் வாழ்வுக்குப் பொலிவூட்டும் தீர்வுகளைக் காணவும் வகுக்கப்படும் செயல்திட்டங்களுக்கு நிதி ஆதரவு வழங்குவது இந்த மானியத்தின் நோக்கம்.
இதற்கு முன்பு இதுபோன்ற 40 செயல்திட்டங்களுக்கு மானிய ஆதரவு வழங்கப்பட்டது. இதன்மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை $16 மில்லியனுக்கும் மேலான நிதி ஆதரவு அளிக்கப்பட்டது. இந்த செயல்திட்டங்களால் உடற்குறை உள்ளோரும் அவர்களைப் பராமரிப்போருமாக சுமார் 8,000 பேர் பலனடைந்தனர்.

