மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தைக் கொண்டு கிளார்க் கீ பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த சண்டை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலிசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் யு டோங் சென் ஸ்திரீட்டை விட்டு 21 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஐவரும் ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது.
சண்டையில் காயமடைந்த 27 வயது மாது, 36 வயது ஆடவர் இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
கலவரம் செய்ததன் தொடர்பில் 29 வயது ஆடவர் ஒருவரையும் போலிசார் கைது செய்தனர்.
போலிசாரிடம் சிக்கிய ஐவரைத் தவிர, சண்டையில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அருகில் இருந்த உணவகம் ஒன்றில் ஆரம்பித்த வாக்குவாதத்தை அடுத்து இச்சண்டை மூண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.
சண்டையைக் காட்டும் காணொளி ஒன்றை ஃபேஸ்புக் பயனாளர் நவின் குமார் தம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். கிட்டத்தட்ட 80,000 பேர் பார்வையிட்டுள்ள அக்காணொளியில், பல பேர் ஒருவரையொருவர் மோதித் தள்ளுவதைக் காண முடிகிறது. மூன்று நிமிடக் காணொளி இறுதியில் நடைபாதை ஒன்றின் தரையிலும் சுவர்ப் பகுதியிலும் ரத்தம் தெறித்திருப்பதைப் பார்க்கலாம்.