மெடிஷீல்ட் லைஃப் மன்றம் முன்வைத்துள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனால் மெடிஷீல்ட் லைஃப் மருத்துவக் காப்புறுதிக்கான சந்தா தொகை மூன்றில் ஒரு பகுதி உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல சிகிச்சைகளைக் காப்புறுதிக்குள் உள்ளடக்கவும் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு செலவினங்களைச் சமாளிக்கவும் சந்தோ தொகை உயர்த்தப்படும்.
இதன் அடிப்படையில் சந்தா தொகை அதிகரிப்பை சிங்கப்பூரர்கள் சமாளிக்க நிதி ஆதரவு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்காக $2.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. மன்றம் பரிந்துரை செய்துள்ள மாற்றங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் தலைமுறையினருக்கு அவர்களது மெடிசேவ் கணக்கில் கூடுதல் பணம் நிரப்பப்படும் என்றும் அமைச்சு கூறியது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் அடுத்த ஓர் ஆண்டுக்கு மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்துக்கான சந்தா தொகை அதிகரிப்பு 10 விழுக்காட்டுக்கு மேல் செல்லாது.
மெடிஷீல்ட் லைஃப் மருத்துவக் காப்புறுதித் திட்டத்துக்கான சந்தா தொகையைச் செலுத்த சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு $2.2 பில்லியன் வரையிலான நிதி ஆதரவு வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் அறிவித்தது.