கிளார்க் கீயில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் மேலும் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலிசார் தெரிவித்தனர்.
22 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு ஆடவர்களும் 22 வயது பெண்ணும் யூ டோங் சென் ஸ்திரீட் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, மத்திய போலிஸ் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் தீவு முழுவதும் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கலவரம் பற்றி தகவல் கிடைத்து போலிசார் அங்கு சுமார் 10.40 மணிக்கு வந்து சேர்வதற்குள் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்தக் கைகலப்பில் காயமுற்ற இருவருக்கு பொதுமக்கள் முதலுதவி புரிந்துகொண்டிருந்தனர். அங்கு 27 வயது பெண்ணும் 36 வயது ஆடவரும் காயமடைந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதன் தொடர்பில் ஐவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
ஐவரில் நால்வர் யூ டோங் சென் ஸ்திரீட்டில் உள்ள ‘த டிப்சி கவ்’ மதுக்கூடத்துக்கு வெளியே சட்டத்துக்குப் புறம்பாக நின்றுக்கொண்டிருந்தனர்.
27 வயது விக்டர் அலெக்சாண்டர் ஆறுமுகம், 26 வயது மதன் ராஜ் குணசேகரன், 33 வயது சங்கர் கணேஷ் வேலுசாமி, 22 வயது லஷ்வின் குமார் மணிமாறன் ஆகியோரே அந்த நால்வர்.
ஐந்தாமவரான 30 வயது சஹாதேவ் குமார் திரிட்ராஜ், கத்தியைக் கொண்டு மற்றவருக்குக் கடுமையான காயம் விளைவித்த காரணத்துக்காக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் அந்தக் கைகலப்பில் கத்தியைக் கொண்டு ஒருவரைக் குத்தினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
கலவரத்தில் சம்பந்தப்பட்ட 22 வயது பெண்ணிடம் போலிசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
சட்டத்துக்குப் புறம்பான வகையில் கூடும் கும்பலில் இருந்ததாக நிரூபிக்கப்படும் ஒருவருக்கு ஈராண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒருவருக்கு கடுமையான காயத்தை விளைவிப்போருக்கு ஆயுள் தண்டனை, பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.