பெரிய அளவிலான தொழிற்சாலை கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்காக துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையில் 'இன்டஸ்ட்ரியல் லிக்விட் மோடியுல்ஸ்' எனும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்ட 'சைனா ஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் எஞ்சினியரிங்' (சிஎஸ்சிஇ) நிறுவனத்திற்கு $237 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டப்பட்டு வரும் துவாஸ் ஆலைக்காக பொதுப் பயனீட்டுக் கழகம் வழங்கியுள்ள ஆறாவது பெரிய அளவிலான கட்டுமான ஒப்பந்தம் இது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலை கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை சிஎஸ்சிஇ கட்டும் என்று கழகம் நேற்று கூறியது.
"பொதுப் பயனீட்டுக் கழகம், தொழிற்சாலை கழிவுநீரை மறுபயன்பாட்டிற்காக சுத்திகரிப்பது இதுவே முதன்முறை. தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஆற்றலை மேம்படுத்துவதில் இது முக்கிய படி," என்று கழகம் சொன்னது.
துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை, தொழிற்சாலை மற்றும் வீடுகளின் கழிவுநீர் இரண்டையும் பெற்று அதைச் சுத்திகரிக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட நீர், கூடுதல் சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு மறுபயன்பாட்டிற்காக தொழிற்சாலைகளுக்குத் திருப்பி அனுப்பப்படும்.
மேற்கூறப்பட்ட இந்த உள்கட்டமைப்பு வசதிகள், நாள் ஒன்றுக்கு 150,000 கன மீட்டர் வரையிலான தொழிற்சாலை கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ஆற்றல் உடையவை. இது 60 ஒலிம்பிக் நீச்சல் குளங்களில் நிரம்பிய நீரின் அளவுக்குச் சமம்.
இந்த 'இன்டஸ்ட்ரியல் லிக்விட் மோடியுல்ஸ்' வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கும். 2025ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த வசதிகள் கட்டங்கட்டமாக பயன்படுத்தப்படும்.

