கி.ஜனார்த்தனன்
ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் நாளன்று கிட்டத்தட்ட நூறு விருந்தினர்களுக்குச் சமைத்துப் பரிமாறுவது 70 வயதான திருவாட்டி வெள்ளைத்தாயின் வழக்கம்.
ஆனால், கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாடப்படும் நிலையில், இவரது பிள்ளைகள் மூவரும் உணவு ஏற்பாட்டைப் பார்த்துக்கொண்டு, தங்கள் தாய்க்கு ஓய்வு அளித்துள்ளனர்.
"என் மூத்த மகன் ஜானின் குடும்பத்தினருடன் நான் தங்கி உள்ளேன். நண்பகல் உணவிற்காக என் மகளின் குடும்பத்தினரும் இரவில் இளைய மகனின் குடும்பத்தினரும் வீட்டிற்கு வருவார்கள்," என்றார் திருவாட்டி வெள்ளைத்தாய்.
"கொரோனா நோய்ப் பரவல் முறியடிப்புக் காலகட்டத்தில் தேவாலயத்திற்குச் செல்ல முடியாமல் போனதால் தொடக்கத்தில் எனக்கு வருத்தமாக இருந்தது. இருந்தபோதும், இணையம் வழியாக தேவாலய போதனைகளைக் கேட்டுக்கொண்டேன்," என்ற திருவாட்டி வெள்ளைத்தாய்க்கு மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர்.
சிங்கப்பூர் சிறார் சங்கத்தில் பணியாற்றும் திருவாட்டி வெள்ளைத்தாயின் மருமகள் பிரியதர்ஷினி செல்வராஜ், 39, முன்களப் பணியாளராக இருப்பதால் அவர் வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். இதனால் தொடக்கத்தில் சிரமத்தையும் மனஉளைச்சலையும் உணர்ந்த திருமதி பிரியா, கிறிஸ்மஸ் நாள் தமக்கு ஓய்வையும் தம் நான்கு வயது மகள் அரில்லாவுக்குக் குதூகலத்தையும் தந்திருப்பதாகக் கூறினார்.
புனித வெள்ளி, ஈஸ்டர் போன்றவற்றைத் தனிமையில் கொண்டாடிய நிலையில், கிறிஸ்மஸ் நாளிலாவது தங்களால் விருந்தினர்களை வரவேற்க முடிவதை நினைத்து தமது குடும்பம் நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார் திருவாட்டி வெள்ளைத்தாயின் மூத்த மகன் ஜான் ராஜ் பாலகிருஷ்ணன், 43.

