சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் தமிழ் மொழி விழாவில் நடத்தும் முத்தமிழ் விழா, இந்த ஆண்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவாக, இம்மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இணைய வெளியில் சிறப்பாக நடைபெற்றது. 'ஸூம்' செயலி மற்றும் 'யூடியூப்' நேரலை வழி நடைபெற்ற நிகழ்வில் ஏறத்தாழ 1,200 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர் .
ஆண்டுதோறும் உள்ளூர்த் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கும் தமிழவேள் விருது இந்த ஆண்டு மூத்த எழுத்தாளர் கடையநல்லூர் ஜமீலாவுக்கு வழங்கப்பட்டது. கவிதை, சிறுகதை, கட்டுரை என 10 நூல்கள் எழுதியுள்ள திரு. N. M. சம்சுதீன் என்ற கடையநல்லூர் ஜமீலா அவர்கள் தொடர்ந்து தனது படைப்புகளை எழுதி வருகிறார்.
நிகழ்வில் மாறுவேடப்போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டியில் வெற்றி பெற்ற பாலர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களின் படைப்புக்கள் இடம் பெற்றன. முத்தமிழ் விழாவையொட்டி நடைபெற்ற பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகளின் வெற்றியாளர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டார்கள் .
நிகழ்விற்கு தலைமையேற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப அருணாசலம், எழுத்தாளர் கழகம் நோய்ப் பரவல் காலத்திலும் தொடர்ந்து தடைப்படாமல் இலக்கியப் பணி ஆற்றியதை குறிப்பிட்டதோடு, இதுபோன்ற இடர் நிறைந்த காலங்களில் இலக்கிய ஆர்வம் அனைவருக்கும் துணை நின்று உற்சாகம் அளிக்கும் எனக் குறிப்பிட்டார் .
இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவரும், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பித்ததுடன், நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.
முத்தமிழ் விழாவின் வெள்ளி விழாவையொட்டி, வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், அடங்கிய வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு கண்டது.
சிறப்பு விருந்தினர் முனைவர் தினகரன் வெளிட்ட வெள்ளி விழா மலரின் முதல் பிரதியைப் முனைவர் சுப திண்ணப்பன் பெற்றுக் கொண்டார். வெள்ளிவிழா மலரின் சிறப்புக் குறித்து, மலராசிரியர் திரு நா ஆண்டியப்பன் உரை நிகழ்த்தினார்.
நிகழ்வின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய, திரைப்பட நடிகர், கவிஞர் ஜோ மல்லூரி, 'தமிழால் உலகை வெல்வோம்' எனும் தலைப்பில் தமிழின் சிறப்பையும், உலகில் தமிழர்களின் வெற்றியையும், வெற்றி பெற கைக்கொள்ள வேண்டிய வழிகளையும் அழகு தமிழில் அருவிபோல் உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகா வரவேற்புரை ஆற்ற, துணைச் செயலாளர் திரு கோ இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்வை டாக்டர் சரவணன் சண்முகம் தொய்வின்றி நெறிப்படுத்தினார்.

