இவ்வாண்டு பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று பாட்டாளிக் கட்சி நேற்று நடைபெற்ற கட்சித் தேர்லுக்குப் பிறகு தெரிவித்தது.
திருவாட்டி ஹி டிங் ரு, 37, டாக்டர் ஜேமஸ் லிம், 44, திருவாட்டி ரயீசா கான், 27, திரு லுயிஸ் சுவா, 33, ஆகியோரே அந்த நால்வர்.
மேலும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தோல்வி கண்ட குழுவில் இடம்பெற்ற குமாரி நிக்கோல் சியா, 34, திரு கென்னத் ஃபூ, 43, ஆகியோரும் மத்திய செயற்குழுவுக்குத் தேர்வு பெற்றிருக்கின்றனர்.
கட்சியின் தலைமைச் செயலாளரான 44 வயது திரு பிரித்தம் சிங், தலைவரான 55 வயது திருவாட்டி சில்வியா லிம் இருவரும் தங்கள் பதவிக்கு மீண்டும் தேர்வு பெற்றனர்.
அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளரான 64 வயது திரு லோ தியா கியாங், ஹவ்காங் தனித்தொகுதியின் முன்னாள் எம்.பி.யான 59 வயது திரு பிங் எங் ஹுவாட் இருவரும் மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
திரு சிங், திருவாட்டி லிம்மின் சக அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு முகம்மது ஃபைசல் அப்துல் மனாப், 45, திரு ஜெரால்ட் கியாம், 43, திரு லியோன் பெரேரா, 50 ஆகியோருடன் ஹவ்காங் எம்.பி. திரு டெனிஸ் டான், 50 ஆகியோரும் பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அல்ஜுனிட் குழுத்தொகுதியின் முன்னாள் எம்.பி. திரு சென் ஷோ மாவ், முன்னாள் தொகுதியில்லா எம்.பி. திரு டேனியல் கோ இருவரும் மத்திய செயற்குழுவில் இடம்பெறவில்லை என்றாலும் அவர்கள் கட்சியின் உறுப்பினர்களாக தொடர்வார்கள்.
மத்திய செயற்குழுவில் முன்பு இடம்பெற்றிருந்த திரு ஃபிரோஸ் கான், திருவாட்டி லீ லி லியான், டாக்டர் ஜான் யாம், திரு டெரன்ஸ் டான் ஆகியோரும் இப்போது தேர்வாகவில்லை.
கட்சித் தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குமாரி நிக்கோல் சியா, தமக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் பேசிய திரு சிங், "1980களிலிருந்து கட்சியில் உறுப்பினராக இருக்கும் திரு லோ தியா கியாங் போன்று அனுபவமிக்க தலைவரைத் தக்க வைத்துக்கொள்வது கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. அவரிடமிருந்து கட்சியின் இளைய உறுப்பினர்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்," என்றார்.

