கவிமாலை இம்மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணையம் வழி நடத்திய 'கவியாடும் முன்றில்' என்ற நிகழ்ச்சியுடன் மாதம் முழுவதும் இடம்பெற்ற 2020 தமிழ்மொழி விழா நிறைவடைந்தது.
தமிழக தொல்லியல், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராசன் 'ஸூம்' வழியாக உரையாற்றினார்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் எஸ். மனோகரன், தமிழ்மொழி மாதம் 2020 நிறைவுரை ஆற்றினார். சிங்கப்பூரிலுள்ள தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நன்கொடையாளர்கள் ஆகியோரின் உதவியுடன் அனைத்துத் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து வளர்தமிழ் இயக்கம் இவ்வாண்டின் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடித்ததைப் பெருமையாகக் குறிப்பிட்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினரான செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் உரையாற்றியபோது, கவிதைகள் இல்லாவிட்டால் 2000, 5000 ஆண்டுகளுக்கு முந்திய நமது தொன்மை, பண்பாடு, கலாசாரம், காதல், வீரம், கொடை போன்ற அரிய பண்புநலன்கள் பற்றி நமக்குத் தெரியாமலே போயிருக்கும். திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பழம்பெரும் இலக்கியங்களை அறியாமல் போயிருப்போம் என்றார்.
சிங்கப்பூர் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தியதையும், தமிழுக்கு அளித்துவரும் ஆதரவையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
கவிமாலையின் தலைவி கவிஞர் இன்பா தமது தலைமையுரையில், கொரோனா காலத்திலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் தொய்வு இல்லாமல் கவிமாலை பணியாற்றி வந்த பணிகளையும், மாணவர்களுக்கான சேவைகளையும் காணொளி மூலம் காட்டி விளக்கினார்.
மாதந்தோறும் நடைபெற்ற கவிமாலையின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு அதிகமான பரிசுகளைப் பெற்றிருந்த கவிஞர் பிரபாதேவிக்கு விழாவில் 'இளங்கவிஞர் தங்க முத்திரை' விருதை திரு விக்ரம் வழங்கிச் சிறப்பித்தார்.
அதேபோல் ஆண்டுதோறும் தமிழுக்காக சிறப்பான பங்களிப்பைத் தந்த ஒருவருக்கு எம்.ஏ. முஸ்தபா வழங்கும் இலக்கியக் கணையாழி விருது கொடுத்துச் சிறப்பிப்பது வழக்கம். அந்தக் கணையாழி விருதினை மேடை நாடகக் கலைஞர் திரு இராம். நாராயணசாமி பெற்றார்.
இறுதியில் முற்றிலும் மாணவர்கள் கலந்துகொண்டு, மரபுக் கவிதைகளையும், புதுக்கவிதைகளையும் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை அழகுடன் வாசித்துக் காட்டினார்கள்.
அந்த நிகழ்ச்சிக்குத் தமிழாசிரியர் முனைவர் மன்னை இராசகோபால் தலைமை வகித்தார். செயலாளர் மு. சேவகன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியை மாணவிகள் விஷ்ணுவர்தினியும் முத்து சுவேதாவும் தொகுத்து வழங்கினார்கள்.

