இந்து இளங்கோவன்
கொள்ளை நோய் வாட்டத் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல இயலாமல் தங்களின் தங்கும் விடுதிகளிலேயே அடைப்பட்டு தவித்தனர். அவ்வாறு வருமானம் ஈட்ட இயலாமல் போனவர்களுக்குச் சம்பள விவகாரத்தில் கைகொடுக்க முனைந்தது 'லீகல் காக்கி' குழு.
'நீதி பெறுவதில் உங்கள் நண்பன்' என்பதை முழக்கவரியாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் லீகல் காக்கி குழுவைச் சேர்ந்த சாம்பவி ராஜாங்கம் (22), நுர் ஷுக்ரீனா (22), அப்யுதே சமாதர் (22), ஜோயி சங் (22) ஆகியோர்.
சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகதில் பயிலும் இந்நான்கு மாணவர்களும், 'கால்குெலய்ட்' என்ற இலவச சம்பளத் தொகை கணிப்பு கருவியை உருவாக்கியுள்ளனர்.
ஒருவர், சம்பளத்திற்கு உரிமை கோர தகுதியுள்ளவரா என்பதை மதிப்பீடு செய்ய உதவுவதுடன் உரிமைகோரல் செயல்முறை குறித்த வழிகாட்டுதல்களையும் 'கால்குெலய்ட்' திட்டம் வழங்குகிறது.
ஒருவர் சம்பளம் சார்ந்த உரிமைகோரல்களைச் சட்டத்தின் முன் முன்வைக்கும்பொழுது வழக்கின் முதல் கட்டமாக ஒரு நடுவர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இந்தப் பேச்சு வார்த்தையில் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படமாட்டா. எனவே கோரிக்கை முன்வைப்பவர்கள் தங்களுக்கு உரியனவற்றை முழுமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்வதோடு தங்களது சம்பளம் பற்றிய முறையான கணக்கீடுகளைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தங்களது உரிமைகள், சம்பள கணக்கீடுகள் பற்றி போதுமான அறிவும் விழிப்புணர்வும் இருப்பதில்லை. வழக்கில் பிரதிவாதிகள் பொதுவாக வேலை தந்த முதலாளிகளாக இருக்கின்றனர். தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்குச் சட்ட அறிவும் தகவல்களும் அதிகமாகவே இருக்கும். மேலும் தொழிலாளர்கள் அவர்களது உரிமைகோரல் படிவத்தைச் சரியாக நிரப்பவில்லை என்றால் அது வழக்கின் முடிவைப் பாதிக்கலாம்.
இது போன்ற நியாயமற்ற நிலைமையைத் தவிர்க்க, வெளிநாட்டு ஊழியர்கள் போன்ற தொழிலாளர்களுக்குத் தங்களது சம்பள கணக்கீடுகள், வேலைவாய்ப்பு உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வு, அடிப்படை சட்ட அறிவு ஆகியவை இருப்பது மிக முக்கியம். இவையனைத்திலும் வழிகாட்டுதல்கள் வழங்கி பயனாளிகளுக்கு உதவிக்
கரம் நீட்டுகிறது 'கால்குெலய்ட்'.
இந்தக் கணிப்பு கருவியைப் பயன்படுத்தி அடிப்படை சம்பளம், மொத்த சம்பளம், ஓய்வு தின சம்பளம், பொது விடுமுறை தின சம்பளம், மிகை நேர சம்பளம் ஆகியவற்றைக் கணிக்கலாம். இந்த சேவை வெளிநாட்டு ஊழியர்களை எளிதாக சென்றடையவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலம், மலாய், தமிழ், வங்காளம், பர்மிய மொழிகளிலும் வழங்கப்படுகிறது.
"வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது தங்குமிடங்களில் தனிமைப்
படுத்தப்பட்டிருப்பதாலும் வேலை செய்ய முடியாமலும் இருப்பதால், அவர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் வழங்கப்படுமா என்பது குறித்து அவர்களிடையே கவலைகள் பல இருந்தன. மனிதவள அமைச்சு ஆலோசகர்களின் கூற்றுப்படி, அவர்களின் முதலாளிகள் அவர்களுக்கு பொருத்தமான விடுப்பு மற்றும் சம்பள ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்களிடையே நம்பிக்கையின்மை நிலவி வருகிறது. மேலும் வழக்கு தொடுக்கும்
பொழுது மொழித் தடை, சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல் இல்லாமை, வேலைவாய்ப்பு உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் சட்டபூர்வ பிரதிநிதித்துவம் இல்லாமை உள்ளிட்ட தடைகளைச் சந்திக்கின்றனர் நம் வெளிநாட்டு ஊழியர்கள்," என்று கூறினார் குழு உறுப்பினர் சாம்பவி.
இத்தகைய தடைகளிலும் சிக்கல்களிலும் முடிந்தவரை தீர்ப்பதற்கான ஒரு பதிலாக 'கால்குலைட்' அறிமுகப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம், 'செக்பாக்ஸ்-ஏஐ' ஆகியவற்றின் ஆதாரவோடு இக்குழு 'கால்குலைட்'டை அறிமுகப்படுத்தியுள்ளது. 'கால்குலைட்'டைப் பயன்படுத்த calculaid.sal.sg என்ற இணையப்பக்கத்தை அணுகலாம்.

