இம்மாதம் 19ஆம் தேதியன்று கிளார்க் கீ வட்டாரத்தில் உள்ள தி சென்ட்ரல் @கிளார்க் கீ கடைத்தொகுதியிலிருந்து கிளம்பிச் சென்றுகொண்டிருந்தபோது திருவாட்டி நூர்லிடியா அப்துல் ரசாக்கிற்கு அலறல் சத்தம் கேட்டது.
10க்கும் மேற்பட்டோர் போட்ட சண்டையில் பெண் ஒருவர் காயமடைந்து தரையில் கிடந்ததை அவர் பார்த்தார். சிறிதும் தயங்காமல் அப்பெண்ணுக்கு உதவி செய்ய அவர் விரைந்தார்.
அப்பெண்ணுக்கு திருவாட்டி நூர்லிடியா முதலுதவி செய்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வருகிறது.
"அடிதடியில் ஈடுபட்டவர்கள் திரும்பி வரக்கூடும் என்று எனது தோழி அச்சம் தெரிவித்து என்னை அங்கு போக வேண்டாம் எனக் கூறினார். ஆனால் காயமடைந்த ஒருவருக்கு நான் உதவவில்லை என்றால் நான் தாதியாக இருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கூறி அப்பெண்ணுக்கு உதவினேன்.
"எதிர்காலத்தில் நான் தாதி பணியில் இல்லாமல் போனாலும் இத்தகைய சம்வவம் நிகழ்ந்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன்," என்றார் திருவாட்டி நூர்லிடியா.

