சிங்கப்பூரில் பார்தி லியானி என்ற முன்னாள் பணிப்பெண் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட விவகாரம் அண்மையில் பெரிதும் பேசப்பட்டது. அந்தப் பணிப்பெண்ணின் முதலாளியான லியூ மன் லியோங் 'சர்பனா ஜூரோங் குழுமம்' என்ற ஆலோசனை நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார்.
ஆனால் பணிப்பெண் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அந்தப் பதவியில் இருந்து அவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிட்டார்.
அவருக்குப் பதிலாக சாலி மா சீ கியோங் அந்தப் பதவிக்கு இப்போது நியமிக்கப்படுகிறார்.
திரு மா, 64, புதிய பொறுப்பை ஜனவரி 1 முதல் அதிகாரபூர்வமாக மேற்கொள்கிறார். இவர் இப்போது சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகளின் நிர்வாக சபைகளிலும் இவர் இடம்பெற்று இருக்கிறார். திரு மா, சிங்கப்பூர் நில ஆணையத்தின் தலைவராக முன்பு பணியாற்றியவர்.
சர்பனா ஜூரோங் நிறுவனத்தை ஏற்படுத்திய திரு லியூ, அதன் தலைவராகவும் இருந்து வந்தார்.
பணிப்பெண் விவகாரத்தைத் தொடர்ந்து சாங்கி விமானநிலையக் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்தும் திரு லியூ விலகிக்கொண்டார்.
சர்பனா ஜூரோங் நிறுவனத்திற்குத் திரு லியூ ஆற்றிய பணிகளுக்காக திரு மா அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 16,000க்கும் மேம்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கிறது. 30க்கும் அதிக நாடுகளில் விரிவடைந்து இருக்கிறது. பரந்த அளவில் ஆலோசனை சேவைகளை இது வழங்கி வருகிறது.

