வசதி குறைந்த பின்னணியை, அதிக கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களைக் கைதூக்கிவிடும் பள்ளிகளுக்கு 'மாணவர்களைக் கைதூக்கிவிடும் புத்தாக்கத்திற்கான லீ சியன் லூங் விருது' வழங்கப்படவுள்ளது.
இப்போதுள்ள 'வழக்கமான பாட முறையில் புத்தாக்கத்திற்கான லீ சியன் லூங் விருது'க்குப் பதிலாக புதிய விருது வழங்கப்படும். விருதுக் கிண்ணத்துடன் $3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் இவ்விருதுக்குப் போட்டி போடலாம். அதாவது, 335 பள்ளிகள் இப்புதிய விருதுக்குப் போட்டியிடலாம்.
இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள் நியமன, பாராட்டு விழாவில் பங்கேற்ற கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் இவற்றை அறிவித்தார்.
"குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அபாயத்தை எதிர் கொள்ளும் வாய்ப்புள்ள மாணவர்கள் மற்றும் கல்வி ஆதரவு தேவைப்படுவோரை மேம்படுத்த முயற்சி எடுக்கும் பள்ளிகள் இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படும்," என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தகைய மாணவர்களைக் கைதூக்கி விடுவதில் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் வலியுறுத்திக் கூறினார்.


