கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய கடுமையான பொருளியல் மற்றும் சமூக இடையூறுகளைத் தாண்டி அசாதாரணமான, சவால்மிக்க ஆண்டின் இறுதியில் வந்துவிட்டோம்.
அந்த நெருக்கடியிலிருந்து தைரியமாக வெளிவந்து அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் (படம்) தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி விளைவித்த பற்பல சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் மனத்திடத்தையும் பெற்றுள்ள நாம், மீள்திறனுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று இஸ்தானா நேற்று வெளியிட்ட அதிபரின் புத்தாண்டு தினச் செய்தி பற்றிய காணொளியில் திருவாட்டி ஹலிமா வலியுறுத்தியுள்ளார்.
"கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முந்தைய காலத்துக்கு நாம் திரும்பிப் போக முடியாது என்பதை மனதில் நிறுத்தி, நாம் இதுவரை நமது வாழ்க்கையில், வேலையில், வர்த்தகங்களில் ஏற்றுக்கொண்ட மாற்றங்களை மறுஆய்வு செய்யும் தருணம் இது.
"தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துதல், பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகால சவால்கள் போன்றவற்றை தீவிரப்படுத்தும் கட்டாயத்தை கொவிட்-19 உண்டு பண்ணியுள்ளது," என்று அதிபர் விவரித்தார்.
"கொள்ளைநோய்ப் பரவலால் சரிந்துள்ள பொருளியலைத் தூக்கி நிமிர்த்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விமானத்துறையும் பயணத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
"அனைத்துத் தரப்பினரின் ஒன்றிணைந்த முயற்சியால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முழுமையான பொருளியல் மீட்சியைக் காண முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அடுத்த பத்தாண்டுகளில் அதிகமான செலவினத்துடன் மெதுவான வளர்ச்சியே நிலவும் என்று கணிக்கப்படுகிறது.
"நமது உள்கட்டமைப்பிலும் திறன் மேம்பாட்டிலும் நாம் தொடர்ந்து முக்கியமான முதலீடுகளை செய்ய வேண்டும். அப்போதுதான் புதிய முதலீடுகளை ஈர்த்து, அதன் மூலம் புதிய வேலைகளை உருவாக்க முடியும்," என்றும் அதிபர் ஹலிமா சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூரும் இறுக்கமான நிதி நிலைமை காரணமாக, வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆதர வளிக்க, நாட்டின் நிதி இருப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டியதாயிற்று என்பதைச் சுட்டிய அதிபர், ஆக அண்மையில் நவம்பர் மாதத்தில் கொவிட்-19 தொடர்பிலான $8 பில்லியன் கூடுதல் ஆதரவு நிதிக்கு ஒப்புதல் அளித்ததை நினைவுகூர்ந்தார்.
இந்த ஆண்டு சாதனை அளவாக நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட $100 பில்லியன் தொகையை செலவழிக்கும் மசோதாக்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
அதில் சுமார் $52 பில்லியன் நாட்டின் நிதி இருப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட திருவாட்டி ஹலிமா, கொவிட்-19 தடுப்பூசி கிடைத்துவிட்டது என்ற எண்ணம் மெத்தனப்போக்குக்கு இட்டுச் செல்லக்கூடாது என்று நினைவூட்டினார்.
அனைவரும் தொடர்ந்து கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்துமாறும் அதிபர் ஹலிமா கேட்டுக் கொண்டார்.


