சிங்கப்பூரில் முதியோருக்காக வசதிகளுடன் கூடிய முதல் பொது வீடமைப்புத் திட்டத்திற்கான மாதிரி வீடு தோ பாயோ 'எச்டிபி ஹப்'பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் அமையவிருக்கும் இந்த 'சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள்' 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கானவை. தனியாக வசிக்க விரும்பும் அதே வேளையில் பராமரிப்பு, ஆதரவு, சமூக நடவடிக்கைகளைப் பெற விரும்பும் மூத்தோர் இந்த வீடுகளை வாங்க விண்ணப்பிக்கலாம். இந்த மாதிரி வீட்டை நேற்று பார்வையிட வந்த மூத்தோர், இப்புதிய வடிவம் தங்களுக்குப் பிடித்திருப்பதாகக் கூறினர். தங்களது வயதுப் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் வகை செய்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வீடுகளில் கைப்பிடிகள், சக்கர நாற்காலி பயன்படுத்துவதற்கு வசதியுடைய குளியலறை உள்ளிட்ட மூத்தோருக்கான வசதிகள் அமைக்கப்படும்.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்பாளர்கள் ஒருவர் மற்றொருவருடன் பழகுவதற்காக ஒவ்வொரு மாடியிலும் சமூக இடம் அமைக்கப்படும். அவர்களது நடவடிக்கைகளைச் சமூக நிர்வாகி கண்காணிப்பார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஒ) திட்டத்தின்கீழ் இவற்றின் முதல் தொகுதியாக 160 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். இந்த வீடுகள் 2024ல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடுகளை வாங்கும் முதியோருக்குக் கட்டாய சேவைத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால உதவி, அடிப்படை சுகாதாரப் பரிசோதனை, எளிமையான வீட்டுப் பழுதுபார்ப்புச் சேவை உள்ளிட்ட வசதிகள் இந்தத் தொகுப்புத் திட்டத்தில் அடங்கும். இந்த அடிப்படைத் தொகுப்புத் திட்டத்திற்கு அனைத்து குடியிருப்பாளர்களும் சந்தா செலுத்த வேண்டும். 15 ஆண்டுகால குத்தகைக்கு இந்தத் தொகுப்புத் திட்டத்திற்கான கட்டணம் $22,000யில் இருந்து தொடங்குகிறது.
இந்த வீடுகளை வாங்க விரும்பும் மூத்தோர், 15 முதல் 35 ஆண்டுகள் வரையிலான குத்தகையைத் தேர்ந்தெடுக்கலாம். வீட்டு விண்ணப்பதாரர் மற்றும் அவரது துணைவியார் குறைந்தது 95 வயதை எட்டும் வரை குத்தகைகாலம் செல்லுபடியாக வேண்டும்.
இந்த மாதிரி வீடு குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். வீட்டுச் சூழலையும் அதன் அமைப்பையும் பற்றி வருகையாளர்கள் தெரிந்துகொள்ள இது வகை செய்வதாக அவர் கூறி இருந்தார்.

