கொரோனா கிருமித்தொற்றின் தாக்கத்திலிருந்து தொடர்ந்து மீண்டுவரும் பயணம் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அரசாங்கம் மேலும் $84 மில்லியன் மதிப்பிலான ஆதரவை வழங்கவுள்ளது.
அதிகரிக்கும் செயல்பாட்டுச் செலவுகள், பயிற்றுவிப்புத் திட்டங்கள், உற்பத்தித்திறனில் முதலீடு ஆகிய அம்சங்களுக்கு இக்கூடுதல் நிதி ஆதரவு கைகொடுக்கும்.
சிங்கப்பூரின் விமான மையத்தை உயிர்ப்பிக்கவும் மீண்டுவரும் விமானப் பயணங்களுக்கு சிங்கப்பூரைத் தயார்ப்படுத்தவும் புதிய ஆதரவுத் திட்டங்கள் முக்கியம் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
"எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதுடன் குளிர்காலத்தில் மீண்டும் கொவிட்-19 கிருமி பல நாடுகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விமானப் பயணங்கள் விரைவில் மீள முடியாது.
"அதனால் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நல்கும் ஆதரவைத் தொடர்வது மிக முக்கியம். துறை சார்ந்த நிறுவனங்களும் ஊழியர்களும் இந்த நெருக்கடியைக் கடந்துவரவும் அது உதவும்," என்றது ஆணையம்.
செலவுகளைச் சமாளிக்க $39 மி.
கொள்ளைநோயின்போது ஏற்பட்ட கூடுதல் செலவுகளை நிறுவனங்கள் சமாளிக்க $39 மில்லியன் ஒதுக்கப்படும் என்றது ஆணையம். பாதுகாப்பான விமானப் பயணங்களை உறுதிசெய்வதற்காக நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க தொகையைச் செலவழித்துள்ளதாக ஆணையம் விளக்கமளித்தது.
கட்டணங்கள் தொடர்பில் தொடர்ந்து கழிவுகள் வழங்கவுள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டது. சாங்கி விமான நிலையத்திலும் சிலேத்தார் விமான நிலையத்திலும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை தரை செயல்பாடுகள், உணவுச் சேவைகளுக்கான உரிமக் கட்டணங்களில் 50% கழிவு தரவுள்ளது ஆணையம்.
பயிற்சியளிக்க $20 மி.
துறையில் உள்ள ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பதன் தொடர்பில் சுமார் $20 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது. வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ள விமானப் போக்குவரத்து ஊழியர்கள், புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு இதே துறையில் வேறு வேலைகளுக்கு மாற உதவி வழங்கப்படும். இதன் தொடர்பிலான விவரங்கள் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.
வெளிநாட்டு விமான நிறுவனங்களால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட சிங்கப்பூர் விமானிகள், விமானி உரிமத்துக்காக இங்கேயே விண்ணப்பிக்கவும் இனி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் விமான நிறுவனங்களில் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு வேலையை உறுதிசெய்துகொள்ளவும் முடியும்.
வளர்ச்சி நிதிக்கு $25 மி.
விமானத்துறை வளர்ச்சி நிதிக்கு எஞ்சிய $25 மில்லியன் ஒதுக்கப்படும். இதனால் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நிறுவனங்களுக்கு மேம்படுத்தப்பட்ட அளவில் நிதி ஆதரவு கிடைக்கும் என்றது ஆணையம்.
"விமானப் பயணங்களை மீண்டும் பாதுகாப்பான முறையில் கொண்டுவருவதே நம் இன்றியமையாத பணியாகும். நமது விமானப் போக்குவரத்து மையத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இந்த கடினமான பயணத்தை நாம் மேற்கொண்டு மீண்டும் வானில் நம் இடத்தைப் பிடிக்கவேண்டும்," என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் குறிப்பிட்டுள்ளார்.

