பள்ளிச் சீருடைகள் வாங்க அடுத்த மாதம் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பள்ளிச் சீருடை விற்கும் இடத்தில் அலைமோதிய கூட்டத்தை போலிசார் வந்து கலைக்க வேண்டிய நிலை நேற்று ஏற்பட்டதையடுத்து இன்று (டிசம்பர் 30) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெவ்வேறு பள்ளிகளின் சீருடைகளை விநியோகிக்கும் 'ஜீப் சிங் ஃபேஷன்' கடை, புளோக் 4012 அங் மோ கியோ அவென்யு 10ல் அமைந்துள்ளது. விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளி திறக்கவுள்ள நிலையில் தங்களின் பிள்ளைகளின் சீருடை வாங்குவதற்காக இக்கடை வெளியே பலர் நீண்ட வரிசையில் நேற்று காலையிலேயே நிற்கத் தொடங்கினர்.
கடை காலை 10 மணிக்குத்தான் திறக்கும். இருப்பினும், சுமார் எட்டு மணிக்கே பெற்றோர் பலர் கடைக்கு வந்து வரிசை எண்ணைப் பெற்றுக்கொண்டனர்.
அவ்வாறு கடை திறக்கும் சமயத்தில் 100க்கும் மேற்பட்டவர்களால் உருவான வரிசை பாம்புபோல் காணப்பட்டது. வரிசையில் சிலர் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விதியைக் கடைப்பிடிக்காமல் நின்றுகொண்டிருந்தனர்.
இடைவெளி குறித்து நின்றுகொண்டிருந்தவர்களிடம் பின்னர் அங்கு வந்து ஆறு போலிஸ் அதிகாரிகள் வலியுறுத்துவதைக் காண முடிந்தது. காத்திருக்க வேண்டாம் என்றும் சிலரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதையடுத்து வரிசை எண்ணைப் பெற்றுக்கொண்ட சுமார் 70 பேர், தங்களின் முறை வருவதற்காக காத்திருந்தனர்.
இதற்கிடையே வாடிக்கையாளர்கள் கடைக்கு வரவேண்டாம் என்று அந்த கடை அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
நேற்றைக்கு ஒதுக்கப்பட்ட வரிசை எண்கள் அனைத்தும் முடிந்துவிட்டதாக அது கூறியிருந்தது.
இரண்டு மணி நேரம் கழித்தே தம்முடைய மூன்று வயது மகளுக்குப் பாலர் பள்ளிச் சீருடையை வாங்க முடிந்ததாக கடல்துறையில் பணிபுரியும் 46 வயது திரு ஷியோ குமார் என்பவர் தம் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பள்ளி ஜனவரி 4ஆம் தேதியன்று திறக்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வெளியே மூன்று மணி நேரமாக அவர் காத்திருந்தார்.
ஆனால் கூட்டம் காரணமாக மறுநாள் வருமாறு அவருக்குக் கூறப்பட்டது. அதன் பின்னரே நேற்று வரிசை பிடித்துச் சீருடையை வாங்கிவிட்டார்.
இதன் தொடர்பில் 'ஜீப் சிங் ஃபேஷன்' கருத்து கூற மறுத்துவிட்டது.
இணையம் வழியாக வாங்குவது, பொருள்களைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட நேரத்தில் செல்வது போன்ற ஏற்பாடுகளை பெற்றோர் சீருடை விற்பனையாளர்களுடன் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

