தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டம் சிங்கப்பூரில் நேற்று காலையிலேயே தொடங்கிவிட்டது.
தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இரண்டாவது நபர், 43 வயது மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் காளீஸ்வர் மாரிமுத்து.
கொவிட்-19 நோயாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரையும் உறுதிசெய்யப்படுவோரையும் கவனித்து வரும் பணியில் உள்ளார்.
"நான் அதிர்ஷ்டசாலி. இந்த தடுப்பூசி மருந்தால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று உணர்ச்சி வசப்படும் தருணமாகவும் எனக்கு இது உள்ளது," என்றார் அவர்.
"நீண்ட பயணத்திற்குப் பின் இக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். இதுவரை அனைவருக்கும் சிரமமான ஒரு காலகட்டமாக இருந்து வந்துள்ளது.
"இதற்குமுன் தடுப்பூசி மருந்துகளால் கொள்ளைநோய்கள் பல முறியடிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த தடுப்பூசியால் வரலாறு மீண்டும் எழுதப்படட்டும். இருண்ட பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவதற்கான நம்பிக்கை பிறந்துள்ளது," என்றார் டாக்டர் காளீஸ்வர்.
தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அவர், "கூடுதல் பாதுகாப்பு கிடைத்துவிட்டது போல் எனக்கு இப்போதே தோன்றுகிறது. நமக்கு இந்தத் தடுப்பூசிதான் இறுதிக்கட்ட பாதுகாப்பு அம்சமாக இருக்கக்கூடும்," என்றார்.

