சிங்கப்பூரின் வெற்றிகரமான ஹாக்கி விளையாட்டு அணிகளில் அங்கம் வகித்தவர் திரு கிருஷ்ணன் விஜயன் நாயுடு, 55 (படம்). தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.
ஆனால், இவர் மேற்கொண்ட ஓராண்டுகால பயிற்றுவிப்பாளர் பணி, ஹாக்கி விளையாட்டு மீதான ஆர்வத்தைத் தூண்டியது. இப்போது 25 ஆண்டுகள் கழித்து, ஆடவருக்கான தேசிய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை இவர் ஏற்கிறார்.
1995ல் ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தின் ஹாக்கி அணிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை திரு விஜயன் தற்காலிகமாக ஏற்றார். ஓராண்டு காலத்திற்கு ஓய்வில் சென்ற பல்பீர் சிங்கிடம் இருந்து இவர் அப்பொறுப்பை ஏற்றார்.
பயிற்றுவிப்பாளர் அனுபவம் இல்லாவிடினும் ஆண்களுக்கான 'பி' பிரிவில் அப்பள்ளியின் வெற்றிக்கு திரு விஜயன் வித்திட்டார்.
2003ல் சிங்கப்பூர் ஹாக்கி சம்மேளனத்தில் இளையர் மேம்பாட்டுப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பத்தாண்டு காலத்தில் 15க்கும் அதிகமான பள்ளிகளிலும் ஆறு குழுக்களுக்கும் இவர் பயிற்றுவித்தார்.
2016 ஆகஸ்ட்டில் ஆடவருக்கான தேசிய ஹாக்கி அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக திரு விஜயன் நியமிக்கப்பட்டார். 2017 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அந்த அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. ஓராண்டு கழித்து அனைத்துலக ஹாக்கி சம்மேளனப் பொது விருதுத் தொடரை அந்த அணி வென்றது.
இப்போது தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை திரு விஜயன் புத்தாண்டான நாளை ஏற்கிறார். இவருக்கு ஈராண்டுகால ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆசிய ஹாக்கி சம்மேளனக் கிண்ணப் போட்டியில் முதலிரு இடத்தை எட்ட இவர் இலக்கு நிர்ணயித்துள்ளார். சீனாவின் ஹாங்ஸாவ் நகரில் நடைபெறும் 2022 ஆசியப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவது இவரது மற்றோர் இலக்கு.
மலேசியரான திரு கே. ராஜனிடம் இருந்து தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை திரு விஜயன் ஏற்கிறார். 2004ல் ரோனி இயோவிற்கு பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் உள்ளூர்வாசி இவர்தான். தமது நியமனத்தை 'பெருமைக்குரிய தருணம்' எனக் குறிப்பிட்டுள்ள இவர், தமது சாதனைகளைத் தொடர விரும்புவதாகவும் கூறினார்.
"தேசிய அணிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக வேண்டும் என்பதே அனைத்து உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களின் கனவாக இருக்கும். என்னால் எதைச் செய்ய முடியும் என்பதை நான் காட்டியுள்ளேன். எனது திட்டங்களை நிறைவேற்றுவதே இப்போது எனது தலையாய பணி," என்றார் திரு விஜயன்.

