கிறிஸ்மஸ் நாளன்று கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கத் தவறிய கரவோக்கே நிலையத்தின் செயல்பாடுகளை 20 நாள்களுக்கு நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 'எம்இசட்எஸ் ஃபேமிலி கரவோக்கே' நிலையம் தனது வளாகத்தில் ஐந்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை அனுமதித்ததும் அவர்களை இரவு 12.05 மணிக்கு மது அருந்த அனுமதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அந்த கரவோக்கே நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்காதது தொடர்பில் அந்நிலையத்தில் இருந்த 51 வாடிக்கையாளர்களிடம் போலிசார் விசாரித்து வருவதாக அமைச்சு கூறியது.
இதனிடையே, இம்மாதம் 18- 26ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதற்காக ஏழு உணவு, பானக் கடைகளுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஐவருக்கு மேல் அடங்கிய குழுவினரை அனுமதித்து, ஒன்றாக அமர வைத்தது, வெவ்வேறு குழுக்கள் தங்களுக்குள் கலக்க அனுமதித்தது, ஒரு மீட்டர் இடைவெளிக்குள் குழுக்களை அமர அனுமதித்தது, கேளிக்கை நிலையமாக இல்லாதபோதும் விளையாட்டுகளை வழங்கியது உள்ளிட்ட விதிமீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

