பொங்கோல் நார்த்ஷோர் பேட்டையில் இடம்பெறக்கூடிய விவேக திட்ட வீடுகளைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய நவீன வசதிகளை அனுபவிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை அவர்கள் கண்காணிக்க முடியும். அந்தப் பேட்டையில் வசிக்கக்கூடிய குடும்பங்களில் சுமார் 85 விழுக்காட்டினர் அதாவது 1,192 வீட்டு உரிமையாளர்கள் டிசம்பர் 14 நிலவரப்படி தங்கள் வீடுகளுக்கான சாவிகளைப் பெற்று இருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் இத்தகைய வீவக விவேக வீடுகளில் குடியேறி அவற்றின் வசதிகளை முதன்முதலாக அனுபவிக்கும் குடும்பத்தினர் இவர்களாகவே இருப்பார்கள்.
அங்கு 12 புளோக்குகளில் மொத்தம் 1,402 வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அந்த வீடுகளில் புதிய நவீன விவேக மின் சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
அவற்றைக்கொண்டு குடும்பத்தினர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பதை அணுக்கமாகக் கண்காணித்து செலவை மிச்சப்படுத்தலாம் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
பொங்கோல் நார்த்ஷோரில் இதர பல விவேக அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு வசிக்கக்கூடிய மக்கள் புதிய தலைமுறை கார் பேட்டை முறையை முதன்முதலாகப் பயன்படுத்துவர்.
இந்த விவேக முறை ஐந்து புதிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது. அவற்றில் நான்கு அம்சங்கள் 2021 ஜனவரி 4ஆம் தேதி ஒரு கார் பேட்டையில் பரிசோதித்து பார்க்கப்படும். அந்தப் பேட்டையில் 1,000 கார்களை நிறுத்தி வைக்கஇடங்கள் இருக்கின்றன.
அந்தப் பேட்டையின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் வழியில் கைகாட்டி தடுப்பு எதுவும் இருக்காது. வாகனங்களின் பதிவு எண்ணை படச்சாதனங்கள் பதிவு செய்துவிடும்.
அந்த கார் பேட்டையைப் பயன்படுத்துவோர் Parking @ HDB என்ற செயலி மூலம் தங்கள் பற்று, கடன் அட்டையைக் கொண்டு கட்டணத்தைச் செலுத்திவிடலாம்.
ஒரு வாகனம் கார் பேட்டையை விட்டு வெளியேறும்போது உரிய கட்டணம் தானாகவே கழித்து கொள்ளப்படும்.
உடனே அவர்களுக்குப் பல விவரங்களையும் கொண்ட அதற்கான தகவல் வந்துவிடும்.
விதிகளுக்கு முரணாக வாகனத்தை நிறுத்திவைத்தால் அது பற்றியும் தகவல் தெரிவிக்கப்படும்.
கார் நிறுத்துவதற்கான காலி இடங்கள் பற்றி வண்ண விளக்குகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனை நார்த்ஷோர் வட்டாரத்தில் உள்ள இதர கார் பேட்டைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கழகம் தெரிவித்தது.
விளக்கு வெளிச்சம், தண்ணீர்க் குழாய்கள், மின்தூக்கிகள், கழிவுப்பொருள் சேகரிப்பு போன்ற மிக முக்கிய சேவைகளின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்கான உணர்வுச் சாதனங்களும் பொங்கோல் நார்த்ஷோர் பேட்டையில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

