பருவமழைக் காலத்தில் கனமழை, திடீர் வெள்ளத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுப் பயனீட்டுக் கழகம் புதிய வெள்ளப் பாதுகாப்புச் சாதனத்தைப் பரிசோதித்து வருகிறது.
'ஃபிளட்கேட்' என்று அழைக்கப்படும் இச்சாதனம், திடீர் வெள்ளம் ஏற்படும்போது இல்லங்களையும் கட்டடங்களையும் பாதுகாக்க உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வலுமிக்க எஃகு சட்டங்களால் செய்யப்பட்டு ரப்பர் மேற்பூச்சுடன் மடிக்கக்கூடிய இச்சாதனம், எளிதில் விரிவுபடுத்தப்படலாம். குடியிருப்பு, வர்த்தக, தொழிற்சாலை வளாகங்களின் நுழைவாயில்களில் இச்சாதனம் பொருத்தப்படலாம்.
கட்டட நுழைவாயில்களின் அகலத்திற்கேற்ப இந்தச் சாதனம் வெவ்வேறு அளவுகளில் வருகிறது. இதன் உயரம் 0.68 மீட்டராகவும் அகலம் 0.77லிருந்து 1.52 மீட்டராகவும் இருக்கும். கடை வாசல் போன்ற அகலமான நுழைவாயில்களுக்கு ஏதுவாக இந்தச் சாதனங்கள் ஒன்றாக இணைக்கப்படலாம்.
ஒவ்வொரு சாதனத்தின் விலை, அதன் அளவைப் பொறுத்து $800 முதல் $2,200 வரை இருக்கும்.
இதன் செயல்திறனைச் சோதிக்க கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனில் இருந்து 20 சாதனங்கள் வாங்கப்பட்டன. அவற்றில் 15 சாதனங்கள் தற்போதைய பருவமழை காலத்தில் அப்பர் பாய லேபார் சாலையில் குடியிருப்பாளர்களால் சோதிக்கப்படுகின்றன.
வடக்கு கிழக்கு பருவமழை காலம் குறைந்தது ஒரு மாதத்திற்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கழகம் கூறியது.
வடக்கு கிழக்கு பருவமழை காலம் டிசம்பர் முதல் மார்ச் மாத தொடக்கம் வரை நீடிப்பதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு குறுகிய காலத்தில் பெய்த கனமழை காரணமாக சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் ஏழு நாட்கள் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தைச் சேர்ந்த திரு இயோ கெங் சூன், "தற்போதைய சூழலில் திடீர் வெள்ளம் 30 நிமிடங்களுக்குள் வடிந்துவிடுகிறது. என்றாலும், அடிக்கடி கனமழை பெய்வதால் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே, அதைச் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.

