'பிரேக்' வசதி இல்லாத சைக்கிள்களை நடைபாதைகளிலும் சாலைகளிலும் ஓட்டத் தடை விதிக்க வேண்டும் என்று உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் சில வகை சைக்கிள்கள் தடை செய்யப்படக்கூடும். அவற்றில் ஒன்று 'ஃபிக்ஸ்ட்-கியர்' சைக்கிள்கள். இந்த சைக்கிள்களுக்கு கைகளால் இயக்கப்படும் 'பிரேக்' கிடையாது. மாறாக, சைக்கிளின் மிதிக்கட்டையைக் கொண்டே சைக்கிளை நிறுத்த முடியும்.
மேலும், சாகசம் செய்ய பயன்படுத்தப்படும் 'பிஎம்எக்ஸ்' ரக சைக்கிள்களும் பாதிக்கப்படலாம்.
ஆலோசனைக் குழு அதன் பரிந்துரைகளைப் போக்குவரத்து அமைச்சிடம் நேற்று சமர்ப்பித்தது.
"இந்த விவகாரம் குறித்து பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பொதுப் பாதைகளிலும் சாலைகளிலும் ஓட்டப்படும் அனைத்து சைக்கிள்களுக்கும் 'பிரேக்' வசதி இருக்க வேண்டும் என்று ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது," என்று குழு விவரித்தது.
சைக்கிள் ஓட்டுநர்களையும் பாதசாரிகளையும் விபத்தில் இருந்து பாதுகாக்க இது உதவும் என்று அது கூறியது.
'ஃபிக்ஸ்ட்-கியர்' சைக்கிள்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படுவதாக ஆலோசனைக் குழு சொன்னது. அனுபவமில்லாத ஓட்டுநர்கள் அத்தகைய சைக்கிள்களை நிறுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்று அது குறிப்பிட்டது.
ஆலோசனைக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் இத்தகைய சைக்கிள்களை பொதுப் பாதைகளில் ஓட்ட குறைந்தது ஒரு 'பிரேக்'கையாவது பொருத்த வேண்டும்.

