பிடோக்கின் பாரி டெடாப் வாக்கில் உள்ள தானாமேரா கிரஸ்ட் கொண்டோமினியத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 48 வயது மாதைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக 59 வயது ஆடவர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.
லிம் சாங் சுவா எனும் அந்த ஆடவர், திருவாட்டி ஹெங் ஹுவீ சே எனும் மாதை கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்பட்டது.
அந்த மாதின் கழுத்தை இரண்டு கைகளாலும் நெரித்ததுடன் கத்தியால் அவரை வெட்டியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
சம்பவத்தின் தொடர்பில் நேற்று (டிசம்பர் 30) காலை 8 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட போலிசார், அந்தக் குடியிருப்புக்கு வெளியே காயத்துடன் அந்தப் பெண் விழுந்து கிடந்ததைக் கண்டனர்.
சுய நினைவுடன் இருந்த அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டிற்குள் இருந்த 59 வயது ஆடவரை போலிசார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த மாதும் கைது செய்யப்பட்ட ஆடவரும் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இருவரும் தம்பதி இல்லை என்றும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அவர்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.