சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஒருவரும் உருமாறிய பி117 வகை கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்களது முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகை கொரோனா கிருமி பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது அது உலகெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று 27 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அதையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,569.
அந்த விமானி வேலை நிமித்தம் டிசம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கு சென்றிருந்ததாக நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த 23ஆம் தேதி பரிசோதித்தபோது அவருக்கு கிருமித்தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. ஆனால், டிசம்பர் 26 அன்று கிருமித்தொற்று அறிகுறிகள் தோன்றியதையடுத்து, அவர் சிகிச்சை பெற்றார். அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது.
பி117 வகை உருமாறிய கொரோனா தொற்று கண்ட மற்றொரு நபரும் இங்கிலாந்திலிருந்து வந்தவர். வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 53 வயது ஆடவர் அவர்.
டிசம்பர் 21 அன்று அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவுற்றது. ஆனால் அதன் பின்னர் அவருக்கு உடல் வலி, சுவாசப் பிரச்சினை உட்பட கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் வேறு 24 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள்.
அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், நால்வர் நிரந்தரவாசிகள், 12 பேர் வேலை அனுமதி உடையவர்கள், மூவர் சார்ந்திருப்போர் வருகை அனுமதி உடையவர்கள், ஒருவர் நீண்டகால வருகை அனுமதி உடையவர், ஒருவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர், ஒருவர் சிறப்பு அனுமதி உடையவர்.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர் லாய்ட்’ஸ் ரெஜிஸ்டர் சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரவாசி.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.