நிகழ்ச்சிகள், சுற்றுலா தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு அவற்றைத் திட்டமிட்டபடி நிறைவேற்ற முடியாமல் இருக்கும் தரப்பினருக்குக் கூடுதலாக ஒரு மாத காலம் நிவாரணச் சலுகை கிடைக்கும்.
அவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்க முடியாதபடி மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை நேற்றுடன் முடிய இருந்தது. இருந்தாலும் ஜனவரி 31 வரை அது இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சு நேற்று இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
"கொவிட்-19 தற்காலிக சட்டத்தின்கீழ் கொடுக்கப்படும் இத்தகைய ஒப்பந்தங்களுக்கான நிவாரணச் சலுகைக் காலம் நீட்டிக்கப்படும். சிங்கப்பூர் மூன்றாம் கட்ட தளர்வுகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
"இந்தச் சூழலில் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் கொவிட்-19 சூழலை மறுபடியும் மதிப்பிட்டு தங்கள் நிகழ்ச்சி அல்லது சுற்றுலாத் திட்டங்களைத் திரும்பவும் பரிசீலிக்க ஏதுவாக இந்த நீட்டிப்பு இடம்பெறுகிறது," என்று அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இப்போது மேலும் தளர்வுகள் இடம்பெறும் என்பதால் முன்பு செய்துகொண்ட பயண மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எடுத்துக்காட்டாக பெரிய அளவில் திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒரு குடும்பம் அதே நாளில் நிகழ்ச்சியை, குறைவான செலவில் சிறிய அளவில் நடத்திக்கொள்ள இணங்கலாம். இது நியாயமானதாகவே இருக்கும் என்றும் அமைச்சு விளக்கியது.
ஒப்பந்தம் செய்துகொண்டபடி நிகழ்ச்சிகளை கொவிட்-19 காரணமாக நடத்த முடியவில்லை என்றால் அது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகள் பேசி இணக்கம் காணவேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது. இணக்கம் இல்லை என்றால் மட்டுமே நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சு தெரிவித்தது.
சலுகைக் காலம் ஜனவரி 31ல் முடிவடையும். அந்த நாளில்தான் நிகழ்ச்சி மற்றும் சுற்றுலா ஒப்பந்தங்களுக்கான நிவாரணங்களுக்குரிய கடிதங்கள் அனுப்பப்பட வேண்டும்.
சட்டப்படி, ஒரு தரப்பு மற்றொன்றின் சார்பில் நிவாரணம் கேட்டு கடிதம் அனுப்பலாம். இப்படிச் செய்யப்பட்டதும் நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுலாக்களுக்கும் செலுத்தப்பட்ட முன்பணத்தை தானாகவே பறி முதல் செய்துவிட இயலாது.
ரத்து செய்வதற்கான கட்டணம் நியாயமானதுதான் என்று மதிப்பீட்டாளர் ஒருவர் தீர்மானித்தால்தான் அந்தத் தொகையைக் கட்ட வேண்டி இருக்கும்.
இத்தகைய மதிப்பீட்டாளர்களைச் சட்ட அமைச்சு நியமிக்கிறது. நிவாரணத்திற்கான கடிதம் அனுப்பப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
இணக்கம் ஏற்படவில்லை என்றால் நிவாரணக் காலம் முடிந்த பிறகு இரண்டு மாதம் கழித்து மார்ச் மாதம் 31ஆம் தேதி வாக்கில் எந்தவொரு தரப்பும் மதிப்பீட்டாளரின் முடிவுக்கு மனுச் செய்ய முடியும்.
வர்த்தக சாதனங்களுக்கான அல்லது வர்த்தக வாகனங்களுக்கான வாடகை உடன்பாடுகள், தவணைக் கொள்முதல், நிபந்தனையுடன் கூடிய விற்பனை ஆகிய வற்றுக்கான நிவாரணச் சலுகைக் காலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைப் போல ஜனவரி 31ஆம் தேதி முடிவடையும்.
கட்டடம் கட்டி விற்பவர்களுடனான விற்பனைக் கொள்முதல் உடன்பாடுகள், கொள்முதலுக்கான விருப்ப உரிமை, கட்டுமான உடன்பாடுகள், வழங்கீட்டு உடன்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்த வரை நிவாரணக் காலம் மார்ச் 31ல் முடிவடையும்.

