கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறையைப் பல நிறுவனங்களும் அமைப்புகளும் கடைப்பிடித்து வருகின்றன. இது புதிய வேலையிட கலாசாரமாக உருவெடுத்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை பெரும்பாலான ஊழியர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டது.
அத்தியாவசிய சேவை ஊழியர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்போதும் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறையைப் பல நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன.
ஆனால் இந்த மாற்றத்தை ஊழியர்கள் சிலரால் ஏற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை தேசிய பல்கலைக்கழகத்தின் மனநல அறிவியல் நிலையம் நடத்திய ஆய்வில் 1,407 பேர் பங்கெடுத்தனர்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 61 விழுக்காட்டினர் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர். அதே வேளையில், கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் முன்களப்பணியாளர்களில் 53 விழுக்காட்டினர் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தனர்.
வேலைச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆய்வில் பங்கெடுத்த பெண்கள் வீட்டில் இருப்பது மனவுளைச்சலைத் தருவதாகக் கூறினர்.
வீட்டில் இருந்தவாறு அலுவலகப் பணிகளில் ஈடுபடுவதுடன் வீட்டு வேலைகளையும் கவனிப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வீட்டுவேலைகளிலும் குழந்தைப் பராமரிப்பிலும் முன்பைவிட அதிக ஆண்கள் ஈடுபடும்போதும் பெண்கள் இவ்வாறு உணர்வதாக தெரிவிக்கப்பட்டது.
24 மணி நேரமும் குடும்பத்தோடு இருப்பதும் சிலருக்கு மனவுளைச்சலைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது குடும்பத் தகராறு, வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்ததை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு
சுட்டியது.
எப்போதும் பெற்றோருடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து, சுதந்திரம் பறிபோய்விட்டதாகக் கூறி இளையர்கள் சிலர் வீட்டைவிட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அழைப்புகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரித்ததாக அமைச்சின் பெரியவர் பாதுகாப்புச் சேவையும் சிறார் பாதுகாப்புச் சேவையும் தெரிவித்தன.
குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினைகள், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்றவை தொடர்பாகப் பல அழைப்புகள் கிடைத்ததாக அமைச்சு கூறியது. வன்முறை நிகழவில்லை என்பதால் இவை விசாரிக்கப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்தது. கூடுதல் உதவி தேவைப்பட்டவர்களை சமூக அமைப்புகளுக்கு அமைச்சு அனுப்பி வைத்தது.
அமைச்சின் பாதுகாப்புச் சேவைகளால் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்ட புதிய புகார்களின் சராசரி எண்ணிக்கை 2019ஆம் ஆண்டைப் போலவே 120ஆக பதிவானது.
வீட்டில் வேலை செய்வதால் மனவுளைச்சலுக்கு ஆளானவர்கள் மத்தியில் புதிய வேலை அணுகுமுறையால் பலனடைந்தவர்களும் உள்ளனர்.
வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதால் பொதுப் போக்குவரத்துக்கான செலவும் இதர செலவுகளும் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாது, நேரமும் மிச்சமாகியுள்ளதாக அமைச்சின்கீழ் செயல்படும் ‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்றத்தின் தலைவர் திரு இஷாக் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்நிலையில், ஃபுஜிட்சு, ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களைப் போல சிங்கப்பூரை சேர்ந்த சில நிறுவனங்களும் வீட்டிலேயே வேலை செய்யும் அணுகுமுறையை நிரந்தரமாக்கக்கூடும். செலவினத்தைக் குறைக்க இந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பத்தில் எட்டு பேர் வீட்டிலிருந்து வேலை செய்ய, அல்லது நீக்குப் போக்குள்ள வேலை ஏற்பாட்டுக்கு விருப்பம் தெரிவித்தனர்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நிரந்தரமாக்கும்படி சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.