குப்பை நிர்வாக சேவை வழங்கும் செம்ப்வேஸ்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் சீருடை மெல்லிய துணி கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சாலைகளில் பணியாற்றும்போது தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்கள் சீருடையில் ஒளிப் பட்டைகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டனர்.
தங்களின் பச்சை, ஆரஞ்சு நிற சீருடையை மறுவடிவமைக்கும் முறை வந்தபோது அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். முன்பிருந்த 'டெனிம்' காற்சட்டைக்குப் பதில் எடை குறைவான, வானிலையைத் தாக்குப்பிடிக்கக்கூடிய பருத்தியிலான காற்சட்டைக்கு மாற்றப்பட்டது.
சுமார் 600 ஊழியர்கள் அணியக்கூடிய அந்தக் காற்சட்டையில் ஊழியர்களின் பொருட்கள் வைப்பதற்கு போதிய இடமுண்டு. முன்பு காற்சட்டையின் முழங்கால் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பட்டை இப்போது முழங்காலுக்குக் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் மேற்சட்டை 'ட்ரை ஃபிட்' துணியால் தயாரிக்கப்பட்டது. நேற்று தொடங்கி, செம்ப்வேஸ்ட் நிறுவனம் தனது குப்பை சேகரிப்பு ஊழியர்களுக்கு பச்சை, சாம்பல் நிறங்களில் இரு வகை சீருடைகளை வழங்கியுள்ளது.
"எங்கள் சீருடைகள் அணிவதற்கு ஏதுவாக இருக்கும். மாதிரிச் சீருடைகளை நாங்கள் அணிந்து எங்கள் விருப்பங்களைத் தெரிவித்தோம்," என்றார் 45 வயது திரு லிம் பெங் சூன். சேவைத் தலைவராக உள்ள திரு லிம், குப்பை சேகரிப்பு லாரிகளை ஓட்டுகிறார். நேற்று முதல் ஓட்டுநர்கள் குப்பை சேகரிப்புக்கு புதிய லாரிகளைப் பயன்படுத்தலாம். அந்த லாரிகள் கிளமெண்டி-புக்கிட் மேரா பகுதியில் வசிக்கும் 172,000 குடும்பங்களின் குப்பைகளைச் சேகரிக்கும்.
'செம்ப்கார்ப் இண்டஸ்டிரிஸ்' நிறுவனத்தின் ஓர் அங்கமான செம்ப்வேஸ்ட் தனது செய்திக் குறிப்பில், தனது குப்பை சேகரிப்பு லாரிகள் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தக்கூடியது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் குப்பை சேகரிப்பாளர்கள் தங்கள் பணியை சுமூகமாக நிறைவேற்றலாம். சீருடைகள் இம்மாத இறுதிக்குள் எல்லா ஊழியர்களுக்கும் கொடுக்கப்படும் என்று கூறியது.

