சிங்கப்பூரில் புதிதாக 35 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 58,697ஆக உயர்ந்து உள்ளது.
புதிதாக கிருமி தொற்றியவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ புதிதாக எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அறுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். எழுவர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் 33 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்து இருந்தது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்களுக்கும் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்களில் இருவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
அந்த 33 பேரில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த மூன்று வயது சிறுமியும் அடங்குவார்.
அவர் சார்ந்திருப்போர் அட்டை வைத்துள்ளார். நேற்று முன்தினம் தொற்று உறுதியானவர்களில் ஒன்பது பேர் இல்லப் பணிப்பெண்கள்.
தமது பெற்றோரைக் காண இந்தோனீசியாவில் இருந்து இங்கு வந்த ஒரு பயணியும் அந்த 33 பேரில் அடங்குவார். அவர் குறுகியகால வருகை அட்டை வைத்துள்ளார்.
காலி அலுவலகத்தில் ஒன்றுகூடிய 44 பேர் மீது போலிஸ் விசாரணை
புத்தாண்டு தினம் அன்று பூன்லே வே பகுதியில் உள்ள தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் 44 பேர் கொண்ட குழு ஒன்றுகூடியது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த 44 பேரில் 41 பேர் சிங்கப்பூரர்கள், ஒருவர் நிரந்தரவாசி, ஒருவர் மலேசியர், எஞ்சிய ஒருவர் சீன நாட்டவர். புத்தாண்டு பிறந்து பின்னிரவு 1 மணிக்குப் பிறகு, காலியாக இருந்த அலுவலகம் ஒன்றில் அவர்கள் மது அருந்துதல், புகைப்பிடித்தல், பாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொவிட்-19 விதிமுறைகளின்கீழ் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை மீறியதன் தொடர்பில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புத்தாண்டு தினம் பின்னிரவு 1.20 மணிக்கு இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் நேற்று முன்தினம் தெரிவித்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அங்கு 29 ஆடவர்கள், 15 மாதர்கள் ஒன்றுகூடி இருந்ததைக் கவனித்தனர். அவர்கள் 17 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
அந்தக் குழுவினர் பழகி, மகிழ்வதற்காக ஒன்றுகூடியதாகவும் அந்த இடம், பொதுக் கேளிக்கைகளுக்காக உரிமம் பெறவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
பொதுக் கேளிக்கை சட்டத்தின்கீழ், முறையான உரிமமின்றி பொதுக் கேளிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குற்றத்திற்காக $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். கொவிட்-19 விதிமுறைகளின்கீழ் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை மீறியதாக குற்றம் நிரூபணமானால் ஆறு மாதங்கள் வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

