மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டல் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. வசிப்பிடத்தில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிய 13 பேரிடம் கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஹோட்டல் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.
அந்த 13 பேரும் பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தபோதும் ஒரே மூலத்தில் இருந்து அவர்களைக் கிருமி தொற்றி இருக்கக்கூடும் என்பது பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.
அதை அடுத்து, அந்த ஹோட்டலின் 394 விருந்தினர்களுக்கும் 571 பணியாளர்களுக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. கிருமி எவ்வளவு எளிதில் பரவக்கூடியது என்பதை இந்தச் சம்பவம் நினைவுபடுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். கிருமி தொற்றிய அந்த 13 பேர் மீதான விசாரணையைத் தான் முடித்துக்கொண்டு உள்ளதாகவும் அவர்களுக்கு அப்பாற்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்த வேறு எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.
"ஹோட்டல் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாலும் விருந்தினர்களைக் கிருமி தொற்றும் அபாயம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாலும் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலை மீண்டும் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சு விவரித்தது.
எனினும், அந்த 13 பேரை எப்படி கிருமி தொற்றியது என்பது பற்றி இன்னமும் தெரியவில்லை. அந்த ஹோட்டலில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

