2020ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் பல கசப்பான அனுபவங்கள், கடுமையான சவால்களைத் தந்த கொவிட்-19 கிருமித்தொற்றின் கோரத் தாண்டவம் அரங்கேறிய ஆண்டு அது. இந்நிலையில், புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் முரசின் இளம் செய்தியாளர்கள் கடந்த ஆண்டு தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அனுபவங்கள் ஆகியவை பற்றியும் அதிலிருந்து கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் பற்றியும் பகிர்ந்துகொள்கின்றனர்.
புதிய இயல்புடன் புதிய ஆண்டை வரவேற்போம்
இர்ஷாத் முஹம்மது
எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் சிறிய அளவில் மாற்றங்களைச் செய்துவிட்டு ஏதோ பெரிய மாற்றம் செய்துவிட்டதாக நினைப் பவர்கள் பலர். வாழ்க்கை நடைமுறைகளாக இருக்கட்டும், விழா ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், வீட்டு விசேஷங்களாக இருக்கட்டும், ஏன் வேலைகள், பழக்கவழக்கங்கள், சந்திப்புகள், விடுமுறைகள், பயணங்கள் என ஒருவரின் வாழ்க்கையின் எந்த அம்சத்திலும் அவ்வப்போது சிறிதளவு மாற்றங்கள் ஏற்படும். அல்லது ஏற்படுத்திக்கொள்வோம்.
அதற்கு மேல் எந்த ஒரு முயற்சியோ முனைப்போ இருப்பது அரிதுதான். ஆனால் அந்த சிந்தனையையே 2020ஆம் ஆண்டு மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. முடியாது என்று நினைத்ததும் முடியும் என்றாகிவிட்டது. வயதாகிவிட்டது இனி என்ன? எப்படி செய்தோமோ அப்படியே இருப்போம் என்று நினைத்தவர்களும் மாறவேண்டியிருந்தது. தொன்றுதொட்ட காலம் முதல் இப்படித்தான் இது செய்யப்படவேண்டும் என்று இருந்த இயல்பும் மாற வேண்டிய கட்டாயத் துக்குள்ளானது.
உங்களைச் சுற்றிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும் சமூகம் கண்டுள்ள மாற்றங்கள். சற்று நினைத்துப்பாருங்கள் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையில் எப்படி இருந்தோமோ அதற்கும் தற்போதைய நிலைக்கும் எவ்வளவு தூரம் நாம் பயணம் செய்து வந்துள்ளோம் என்று.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொண்டு பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள் நடந்தன. வேறு யாருக்கும் இல்லை; எனக்குத்தான்.
ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சூழ திருமண வைபவத்தை நேரில் காண அழைக்கும் நிலை அப் படியே புரட்டிப்போட்டாகிவிட்டது.
விரல்விட்டு எண்ணி, குறிப்பிட்ட விருந்தினர்களை மட்டும் விசேஷத்திற்கு வரச்சொல்லும் இயல்பை இப்போது ஒன்றன்பின் ஒன்றாக குடும்பங்கள் ஏற்பாடு செய்து நடத்திவருகின்றன.
சென்ற ஆண்டு முழுவதும் திருமணங்களை ஒத்தி வைத்தோர் பலர். இனியும் காத்திருத்தல் ஆகாது என்று பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளின்படி சிறிய அளவில் திருமணங்கள், இதர விழாக்களை ஏற்பாடு செய்து நடத்த அனைவரும் மனதளவில் தயாராகிவிட்டனர்.
நெருக்கமானவர்களாக இருந்தும் சுற்றத்தில் நடக்கும் திருமணத்திற்கு அழைப்புக் கொடுக்கப்படவில்லை என்றாலும் மனக் குறையின்றி அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் சமூகத்தில் பெரும்பாலானோருக்கு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
நிகழ்ச்சிகள் என்று வரும்போது பிரம்மாண்ட அரங்கம், திரளான கூட்டம், கண்கவர் மேடை அலங் காரம், சிறப்பு விருந்தினர், பொன்னாடை, மாலை என சில அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது வழக்கமாக இருந்தது.
மெய்நிகர் உலகில் நிகழ்ச்சிகளை நடத்தமுடியாது என்று நினைத்தவர்களும் இன்று புதிய இயல்பை ஏற்று அதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுவே மாற்றம்.
அந்த விதத்தில் நானும் அண்மையில் மூன்று நாட்கள் சொகுசுக் கப்பல் பயணம் சென்றுவந்தது அற்புதமான அனுபவமாக அமைந்தது. சிறு வயதிலிருந்து சொகுசுக் கப்பலில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஏதோ அதற்கான தருணம் இப்போது கிடைத்ததில் மகிழ்ச்சி.
கன மழை யுடன், குளிர் காற்றுடன் புத்தாண்டு பிறந்துவிட்டது. புதிய இயல்பை அரவணைத்து, புதிய மாற்றத்தைத் தழுவி, சவாலான ஆண்டை வெற்றிகரமாகக் கடந்துவந்த சாதனையாளர்களாக நாம் யாவரும் புதிய ஆண்டை மகிழ்ச்சியாக வரவேற்போம்.
நெருக்கடிநிலையிலும் புதிய வேலை
இந்து இளங்கோவன்
கடந்த ஆண்டு பலருக்குக் கடினமான ஓர் ஆண்டாக இருந்தாலும் எனக்குப் பல புதிய வாய்ப்புகளையும் அனுபவங்களையும் தந்த ஆண்டாகவே அமைந்தது.
நிலையற்ற காலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ் முரசில் செய்தியாளராக எனது பணியைத் தொடங்கினேன். பட்டக்கல்வியை முடித்த பின் சேர்ந்த முதல் முழுநேர வேலை இது. கடந்த ஆண்டு ஜனவரியில் வேலை தேடல் தொடங்கியபோதே கொரோனாவும் கூடவே வந்தது. கிருமித்தொற்று அதிகரிக்க அதிகரிக்க வேலை கிடைக்குமா என்ற சந்தேகமும் பதற்றமும் எழ ஆரம்பித்தது. மார்ச் மாதம் தமிழ் முரசுடன் நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நேர்முகத் தேர்வுகள், எழுத்துத் தேர்வு எனப் பலவற்றைக் கடந்து தமிழ் முரசில் செய்தியாளராக எனது பணி உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் மாதல் தொடங்கவிருந்த வேலை கிருமித்தொற்று தந்த நிலையற்றதன்மையால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக ஜூன் மாதம் தொடங்கியது.
தமிழ் முரசில் எனது முதல் நாள் கடந்த ஜூன் 3ஆம் தேதி காலை 9 மணியளவில் எனது வீட்டிலேயே 'கூகல் மீட்ஸில்' ஆரம்பம் கண்டது. கணினியின் சிறிய திரையில் பிற செய்தியாளர் களையும் செய்தி ஆசிரியரையும் சந்தித்தேன். ஒவ்வொரு திங்கட்கிழமை நடைபெறும் இந்த 'கூகல் மீட்' சந்திப்பில் அந்த வாரத்திற்கான சிறப்புக் கட்டுரைகள், செய்திகள் குறித்த கலந்துரையாடல் நடைபெறும். வேலையில் சேர்ந்து மூன்று வாரங்களுக்கு அவர்கள் பயன்படுத்திய பல சொற்றொடரின் சுருக்கங்கள் எனக்குப் புரியவில்லை. வீட்டிலிருந்தவாறே வேலை செய்ய வேண்டிய அந்த சூழலும் எனக்குக் கைகொடுக்கவில்லை. எங்கு தொடங்குவதென்றே தெரியாது இருந்த எனக்கு ஆதரவாக இருந்து வழிகாட்டு தல்கள் வழங்கினர் சக
செய்தியாளர்களும் செய்தி ஆசிரியர்களும்.
கிருமித்தொற்று தொடங்கியதிலிருந்து பல மாதங்கள் வீட்டிலே 'நெட்ஃபிலிக்ஸ்' பார்த்து காலம் கழித்த எனக்கு செய்தியாளரானதும் ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டு வெளியே சென்று செய்திகளை சேகரிக்கும் வாய்ப்பு கிடைத்தது புத்துணர்ச்சி அளித்தது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் சிங்கப்பூர் பொது தேர்தல் 2020 தொடங்கியது. செய்தியாளர்களுக்கு வேலையும் கூடியது. அரசியலில் அதிக ஆர்வமோ அறிவோ இல்லாத எனக்கு வேட்பாளர்களின் பிரசாரங்களுக்குச் செல்வதும் அவர்களை நேர்காணல் செய்வதும் புதுமையான அனுபவமாகவே இருந்தது.
கடந்த ஏழு மாதங்களாக எனது சக செய்தியாளர்கள் அடிக்கடி என்னிடம் கூறும் ஒன்று, "வழக்கமாக இது இப்படி இருக்காது, இவ்வாண்டு மட்டும் மாறுதலாக இருக்கிறது" என்பதுதான். கிருமித்தொற்றால் சிங்கப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கை பல வழிகளில் மாற்றம் கண்டுள்ள நிலையில், செய்தி சேகரிப்பு முறைகளும் மாறியுள்ளன. நான் இதுவரை தமிழ் முரசு அலுவலகத்திற்கு ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வது வீட்டிலிருந்து வேலை செய்வதைக் காட்டிலும் வித்தியாசமானது என்று எனது சக செய்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழ் முரசு அலுவலகத்துக்குச் சென்று பணிபுரிவது இவ்வாண்டு நான் எதிர்பார்க்கும் முக்கியமானவற்றில் ஒன்றாகும்.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டைப் போல் இவ்வாண்டிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நிலையற்ற சூழலில் மீள்திறனின் முக்கியத்துவம்
எஸ்.வெங்கடேஷ்வரன்
கடந்த ஆண்டு ஏற்பட்ட சோதனைகளிலிருந்து புதிய ஆண்டில் உலக மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதே பலரது கனா. ஆனால் அடங்க மறுக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று இதற்குச் சவாலாக இருக்கிறது.
கிருமித்தொற்றை முறியடித்தாலும் பொருளியல் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், பயண வாய்ப்புகள் போன்றவையெல்லாம் உலகிற்கு வழக்கம்போல திரும்ப வருமா என்பது சந்தேகமே.
எனவே 2021ஆம் ஆண்டு ஓர் அமர்க்கள ஆண்டாக இருக்கவேண்டும் என்று விரும்புவதைவிட எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் மீள்திறனை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவதே சாமர்த்தியமாகும்.
என் தனிப்பட்ட அனுபவத்தில், தமிழ் முரசு நாளிதழ் இயங்கிய விதம், மீள்திறனினின் முக்கியத்துவத்தைப் பற்றி எனக்குக் கற்று தந்தது.
பல நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது பலருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது.
அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் உடனுக்குடன் தொடர்புகொண்டு செய்திகளை எழுதும் பழக்கம் கொண்ட எங்களுக்கு அதை மின்னஞ்சல், தொலைபேசி, மெய்நிகர் காணொளி மூலம் தொடர்புகொண்டு செய்யவேண்டிய சூழ்நிலை உருவானது.
நோய் தடுப்புக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருந்த ஏப்ரல், மே மாத காலத்தில் பலரது உணர்வுகளும் தளர்ந்துபோனதை எங்களில் பலர் உணர்ந்தோம்.
ஆனாலும் ஒவ்வொரு நாளும் தரமான செய்திகளை வழங்குவதில் முனைப்புடன் இருந்தோம். நாட்டு நடப்பு முதல், இந்தியா, உலகம் சார்ந்த செய்திகளை சிறிதளவும் தரம் குறையாமல் வழங்கி வந்தோம்.
கொவிட்-19 சூழலில் நமது இந்திய சமூகம் எதிர்நோக்கிய சவால்கள் அவற்றை முறியடிக்க அது ஆற்றிய பங்கு ஆகியவற்றை நாங்கள் பதிவு செய்தோம்.
பல மாற்றங்களுக்கும் நிலையற்ற சூழலிற்கும் இடையே இதைச் செய்தோம். இதற்கு எங்களது மீள்திறன் ஒரு முக்கிய காரணம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, ஒற்றுமையுடன் செயல்பட்டது மற்றொரு காரணம். இதற்கிடையே, புதிதாக எதுவும் செய்ய முடியாத ஆண்டு என்று நினைத்தபோது 'அகம்' மேடைநாடக குழுவின் 'இஸம்ஸ்' என்ற மேடைப்படைப்பு திட்டத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்வில் முதல் முறையாக நடித்தேன். கடந்த ஆண்டில் புதிய அனுபவத்தை வாழ்க்கை எனக்கு தந்துள்ளது என்பது வியக்கத்தக்கது. நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த ஆண்டில் பல சவால்களை எதிர்பார்க்கிறேன். சவால்களுக்கு இடையே என் திருமணமும் நிகழவுள்ளது. மகிழ்ச்சி, சிறிதளவு அச்சம், எதையும் சமாளித்துவிட முடியும் என்ற தைரியம் ஆகிய உணர்ச்சிகளின் கலவையுடன் புதிய ஆண்டை வரவேற்கிறேன். 2020ஆம் ஆண்டில் கிடைத்த அனுபவங்களே இதற்குக் காரணம்.
புது ஆண்டு என்ன சவால்களை தந்தாலும் அதை உடைத்தெறிந்து சாதனைகள் புரிவோம், மீள்திறனுடன் முன்னேறுவோம்.
வாழ்க்கைப் பாதையை மாற்றிய கொவிட்-19
கி.ஜனார்த்தனன்
2019ஆம் ஆண்டில் என் நண்பரின் திருமணத்திற்காக சென்னைக்குச் சென்றிருந்தேன். அதன் பிறகு ஊட்டியில் உல்லாசப் பயணம் மேற்கொண்டது இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது. தற்போதைய கிருமிப்பரவல் சூழலிலும் இந்த நினைவுகள் அவ்வப்போது எட்டி பார்க்கின்றன.
இவ்வாண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தனியாக செல்ல செல்லவேண்டும் என விரும்புகிறேன்.
கொவிட்-19 முதன்முதலில் தலைதூக்கியபோது இந்தியாவில் உள்ள சிலர் சாம்பார், ரசம் சாப்பிடுவதால் அவர்களுக்கு இயற்கையான கொரோனா தடுப்பு சக்தி உள்ளது என்ற கூறியதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. கிருமிப்பரவலின் வேகத்திற்கு எல்லைக் கட்டுப்பாடுகளும் முடக்கநிலைகளும் ஈடுகொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நிலைமை சீராகும்வரை பொறுத்திருக்கும்படி எனது அன்புக்குரியவர்கள் அறிவுறுத்தினர். அவர்கள் சொற்படி நான் நடந்துகொண்டதால் எனக்குத் தெரிந்த சிலரைப்போல விமானப் பயணச்சீட்டுகள், விடுதி ஆகியவற்றுக்கான முன்பதிவுகளைச் செய்து பணத்தை இழக்கும் நிலை ஏற்படவில்லை.
நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டதால் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தங்களது உறவினர்களின் திருமணங்களைக்கூட சிலரால் நேரில் காண இயலவில்லை.
நிலைமை சரியாகும் வரை திருமணங்களை ஒத்திவைப்பது சாத்தியமாகும். ஆனால் இறுதிச் சடங்குகள் அப்படி அல்ல.
கொவிட்-19 சூழலில் உளவியல் ரீதியான பல்வேறு மாற்றங்களைப் பலர் எதிர்நோக்குகின்றன, காதல் வயப்பட்டவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் முறிந்த உறவுகளும் உள்ளன. கொவிட்-19 சூழல் காரணமாக சிலரது வாழ்க்கைப் பாதைகளும் மாறியுள்ளன என்று சொன்னால் அது மிகையன்று.
என்னால் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியாதபோதும் வேறு சில பயணங்களை மேற்கொண்டேன்.
கற்றல் பயணங்கள், உறவுப் பயணங்கள் எனப் பல்வேறு பாதைகளில் சென்றேன். சில பயணங்கள் இனிதாக அமைந்தன. வேறு சில பாதைகளில் சற்று கரடுமுரடாகவே இருந்தன.
கொவிட்-19 காரணமாக நமது வாழ்க்கை முறை பெரிதளவில் மாற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். உலகத்தைப் பற்றி மேலும் நன்கு புரிந்துகொண்டு இளையர்களான நாம் புதிய இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நம்பிக்கையை மூலதனமாகப் பயன்படுத்தி பயணங்களைத் தொடங்குவோம், தொடருவோம்.

