புதிய சட்டத்தில் இருந்து போலி ஆயுதங்களுக்கு விலக்கு

புதிய சட்டத்தில் இருந்து போலி ஆயுதங்களுக்கு விலக்கு

1 mins read
ee7ff964-483c-47df-9446-1b06ec5af2a4
-

சிங்கப்பூரில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம், உண்மையானவைப்போல இருக்கும் போலி ஆயுதங்களுக்குப் பொருந்தாது என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை தேவைப்படும் அளவுக்கு அத்தகைய ஆயுதங்கள் பெரியளவில் ஆபத்தை ஏற்படுத்த மாட்டா என்று அவர் விவரித்தார். பொழுதுபோக்கிற்காக வாங்கப்படும் 'நெர்ஃப்' ரக துப்பாக்கிகளைச் சரியாக பயன்படுத்தினால் அவை காயம் விளைவிக்கும் சாத்தியம் குறைவு. எனவே துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் கட்டுப்பாட்டு மசோதாவில் இருந்து 'நெர்ஃப்' துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் புதிய சட்டத்திற்கு முன்பாக நடப்பில் இருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்களைக் கொண்டு நடவடிக்கைகளை நடத்துவோர் தனிப்பட்ட முறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தங்களது ஆதரவுக்காக அவையில் இருந்தவர்களுக்கு நன்றி கூறிய திரு டான், "சிங்கப்பூரில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை பாதுகாப்பான, பொறுப்புள்ள முறையில் கையாளப்படுவதை உறுதி செய்ய இந்தச் சட்டம் பெரிதும் கைகொடுக்கும்," என்றார்.

துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்களுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் தானியக்க ஆயுதங்கள் போன்ற அதிக அபாயத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கவும் இந்தப் புதிய மசோதா நோக்கம் கொண்டுள்ளது. இத்தகைய ஆயுதங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதில் இருந்தும் முப்பரிமாண அச்சு வடிவத்தில் துப்பாக்கிகள் அல்லது துப்பாக்கிப் பாகங்கள் தயாரிக்கப்படுவதில் இருந்தும் இந்தச் சட்டம் பாதுகாக்கிறது.