சிங்கப்பூரின் மேற்கு முனையில், துவாஸ் பகுதியில் உள்ள 'Tuas Lamp Post 1' எனும் விளக்குக் கம்பம், கூகல் வரைபடத்திலும் இடம்பெற்றுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.
சைக்கிளில் தீவைச் சுற்றி வரும் சைக்கிளோட்ட ஆர்வலர்கள், அந்த விளக்குக் கம்பத்தை ஒரு முக்கிய அடையாளமாகக் கருதி அங்கு நிறுத்துவார்கள்.
மேலும் அந்த விளக்குக் கம்பத்துக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் தங்களுக்கு விருப்பமான ஒட்டுவில்லைகளை அந்த விளக்குக் கம்பத்தில் ஒட்டிவைத்து விட்டு செல்வார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
"அந்தப் பகுதியில் விளக்கு வெளிச்சம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் குத்தகை நிறுவனம், தனது வழக்கமான சோதனையின்போது அந்தப் பகுதியில் உள்ள இந்தக் குறிப்பிட்ட விளக்குக் கம்பம் உட்பட பல விளக்குக் கம்பங்களை அப்புறப்படுத்தியது.
அங்கு தங்களுக்கு விருப்பமான ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட விளக்குக் கம்பம் அகற்றப்பட்ட செய்தியறிந்த சைக்கிளோட்ட ஆர்வலர்கள் கவலையடைந்தனர்.
இதை அறிந்த அமைச்சர் ஓங், இது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பேசினார். ஆணையம் ஜேடிசி கழகத்துடன் பேசியது.
"தீவின் வெகு தொலைவில் இருக்கும் ஒரு விளக்குக் கம்பம் என்பதாலும் சைக்கிளோட்டிகளுக்கு முக்கிய அடையாளச் சின்னமாக விளங்குவதாலும் அந்தப் பிரபலமான விளக்குக் கம்பத்தை முன்பிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்க நாங்கள் முடிவு செய்தோம்.
"விதிமுறைகளில் செய்யப்பட்டு உள்ள இந்தச் சிறிய மாற்றம் வசதிக் குறைவை ஏற்படுத்தாது அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தையும் விளைவிக்காது.
"அதற்கு மேலாக சிங்கப்பூரில் சைக்கிளோட்ட ஆர்வலர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும். இந்தக் காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்பட்டது. நானும் இந்தப் பிரபலமான விளக்குக் கம்பத்தை அருகில் சென்று பார்க்க ஆவலாக உள்ளேன்," என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் கருத்துரைத்திருந்தார்.

