வாட்ஸ்அப் கணக்குகளை அபகரித்துக்கொள்வதன் தொடர்பில் இரண்டு புதிய வகை மோசடிகள் தலைகாட்டுவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது. ஒருவருக்கு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தி வரும். ஆறு இலக்கச் சரிபார்ப்பு தகவலைத் தெரிவிக்கும்படி அந்தச் செய்தி கேட்டுக்கொள்ளும். ஆறு இலக்க எண்ணை அனுப்பியதும் அனுப்பியவர் தனது வாட்ஸ்அப் கணக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும். இந்த மோசடி இன்னமும் நடக்கிறது.
அதேவேளையில், மேலும் இரண்டு மோசடிகள் தலைகாட்டி இருக்கின்றன.
வாட்ஸ்அப் ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு மோசடி பேர்வழிகள் அப்பாவிகளிடம் தொடர்புகொண்டு ஆறு இலக்கச் சரிபார்ப்பு எண்ணை தெரியப்படுத்தும்படி கேட்பார்கள். அந்த எண்ணை அனுப்பிய பிறகு அனுப்பியவர் தன்னுடைய வாட்ஸ்அப் தொடர்பை இழந்துவிடுவார். இப்படி ஆறு இலக்கச் சரிபார்ப்பு எண்ணைப் பகிர்ந்துகொள்ளும்படி யாரையும் தான் கேட்பதில்லை என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு வகை மோடியும் இடம்பெறுகிறது. மோசடி பேர்வழி தனது கைபேசியில் அப்பாவி ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கில் செல்வதற்கு திரும்பத் திரும்ப தவறான ஆறு இலக்கச் சரிபார்ப்பு எண்ணை பயன்படுத்துவார். இப்படி நடக்கும்போது வாட்ஸ்அப் நிறுவனம், அந்த அப்பாவிக்கு குரல் சரிபார்ப்புத் தகவலை அனுப்பும். இதை அவர் அலட்சியப்படுத்திவிட்டால் இந்தத் தகவல் அவருடைய குரல் மின்னஞ்சல் கணக்கிற்குப் போய்விடும்.
மோசடிக்காரர், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் கொடுத்துள்ள பொதுவான ரகசிய எண் மூலம் அந்தக் குரல் தகவலில் இருந்து ஆறு இலக்கச் சரிபார்ப்பு எண்ணை பெற்று அதன்மூலம் அந்த அப்பாவியின் வாட்ஸ்அப் கணக்கிற்குச் சென்று அதை அபகரித்துவிடுவார். பொதுமக்கள் வாட்ஸ்அப் கணக்குச் சரிபார்ப்பு எண்களை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்று போலிஸ் அறிவுரை கூறி இருக்கிறது. வாட்ஸ்அப்பை பயன்படுத்தும்போது இரண்டு கட்ட சரிபார்ப்பு அம்சத்தைப் பயன்படுத்தி கணக்கைப் பத்திரப்படுத்திக்கொள்ளும்படி போலிஸ் வலியுறுத்திக் கூறி உள்ளது.
மோசடிகள் பற்றிய பல விவ ரங்களைக் கேட்டறிந்து விழிப்புடன் இருந்துகொள்ள உதவும் வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள 1800-722-6688 என்ற எண் மூலம் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.