பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் பலரும் பல்கலைக்கழகப் படிப்பிற்குச் செல்லும் போக்கு அதிகரிக்கிறது.
மாணவர்கள் தங்கள் படிப்பு பற்றியும் வாழ்க்கைத்தொழில் விருப்பம் பற்றியும் சிறந்த முறையில் தெரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
இவற்றின் விளைவாக பலதுறைத் தொழிற்படிப்பு மூலம் பல்கலைக்கழகக் கல்விக்குச் செல்லும் ‘ஓ’ நிலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கூட்டு மாணவர் சேர்ப்பு நடைமுறை வழியாக சென்ற ஆண்டு உயர்நிலைப்பள்ளிக்குப் பிந்தைய கல்வி நிலையங்களில் இடமளிக்கப்பட்ட 20,300 பேரில் சாதனை அளவாக 52 விழுக்காட்டினர் இங்குள்ள ஐந்து பலதுறைத் தொழிற் கல்லூரிகளில் இடம்பெற்றனர்.
இதர 38 விழுக்காட்டினருக்கு தொடக்கக் கல்லூரிகளிலும் மில்லேனியா கல்வி நிலையத்திலும் இடம் அளிக்கப்பட்டது. 10 விழுக்காட்டினருக்கு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இடம் கிடைத்தது.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சென்ற ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களில் ஏறக்குறைய 45 விழுக்காட்டினர் தொடக்கக் கல்லூரிக்கான தகுதியைப் பெற்றிருந்தனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அளவு 2014ல் 40 விழுக்காடாக இருந்தது.
தொடக்கக் கல்லூரியில் சேர வேண்டுமானால் ஒரு மாணவர், ஆங்கிலம் மற்றும் ஐந்து ஏற்புடைய பாடங்களின் அடிப்படையில் பெறுகின்ற L1R5 மதிப்பெண் 20 புள்ளிகளைத் தாண்டக்கூடாது.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளைப் பொறுத்தவரை, ஆங்கிலம் மற்றும் இதர நான்கு பாடங்களுக்கான தேர்ச்சித் தகுதி 26 புள்ளிகளைவிட அதிகமாகக்கூடாது.
இதனிடையே, பட்டயப் படிப்பிலிருந்து பட்டப் படிப்புக்கு மேம்பட விரும்பும் மாணவர்களுக்கு அதிக மான வாய்ப்புகளை அரசாங்கம் அளிக்கிறது.
இதன் காரணமாக பலதுறைத் தொழிற்கல்லூரி வழியாக பட்டப் படிப்புக்குச் செல்லும் வழி, மாணவர்களை அதிகம் கவர்வதாக இருக்கிறது என்று பெற்றோரும் மாணவர்களும் தெரிவிக்கிறார்கள்.
அரசாங்கம் 2012ல் பல்கலைக்கழக இடங்கள் அதிகரிப்பு பற்றி அறிவிப்பு விடுத்தது. அப்போது பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளில் 20 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்தனர். இந்த அளவு 2019ல் 30 விழுக்காடாகக் கூடியது.
கடந்த ஏழு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பெரும்பாலான புதிய பல்கலைக்கழக இடங்களைப் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டயப் படிப்பு முடித்த மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
இவ்வேளையில், தொழில் முனைப்புள்ள தங்களுடைய 17 வயது மகன் இன்று ‘ஓ’ நிலை தேர்ச்சி சான்றிதழ்களைப் பெறுகிறார் என்றும் அவர் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து வங்கி, நிதித்துறை படிக்க விரும்புகிறார் என்றும் பட்டதாரிகளான ஆர். மல்லிகா, 46, என்ற இல்லத்தரசியும் அவருடைய கண வரும் நேற்று தெரிவித்தனர்.