புக்கிட் பாத்தோக்கில் உள்ள ரென் சி தாதிமை இல்லப் பணியாளர்கள் 50 பேருக்கு நேற்று கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
இதையடுத்து, ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி பெற்ற சமூகப் பராமரிப்புத் துறையின் முதல் தாதிமை இல்லம் எனும் சிறப்பை அது பெற்றது.
ரென் சி இல்லத்தின் தாதிமைப் பணிகளுக்கான துணை இயக்குநர் எல்சி டியோ முதலாவது ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
"கிட்டத்தட்ட ஓராண்டாக கொவிட்-19 தொற்றை எதிர் கொண்டு வந்துள்ள நிலையில், தடுப்பூசி மூலமாக நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி தருகிறது," என்றார் திருவாட்டி டியோ.
தாதிமை இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களாகக் கருதப் பட்டனர்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் லீ ஆ மூய் முதுமைக்கால இல்லம் ஒரு கிருமித்தொற்றுக் குழுமமாக உருவெடுத்ததை அடுத்து, தாதிமை இல்லங்களுக்குப் பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கிருமிப் பரவல் உச்சத்தில் இருந்த போது, அந்த இல்லவாசிகள் 14 பேர் அதனால் பாதிக்கப் பட்டு, அவர்களில் நால்வர் இறந்துவிட்டனர்.
அதன் விளைவாக, கிருமி மேலும் பரவாமல் தடுக்க தாதிமை இல்ல ஊழியர்கள் அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.
இதனிடையே, அங் மோ கியோவில் உள்ள இன்னொரு ரென் சி தாதிமை இல்லத்தின் பணியாளர்களுக்கும் ரென் சி சமூக மருத்துவமனை ஊழியர்களுக்கும் வரும் வாரங்களில் தடுப்பூசி போடப் படும் எனக் கூறப்பட்டது.