வழக்கமான இரண்டு இணைக் கதவுகளுக்குப் பதிலாக மூன்று இணைக் கதவுகளைக் கொண்ட மாடிப் பேருந்துகள் அடுத்த மாத இறுதியில் இருந்து சிங்கப்பூர் சாலைகளில் வலம் வரத் தொடங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பேருந்தின் மேல்தளத்திற்குச் செல்ல இரண்டு இடங்களில் படிக்கட்டுகள் அமைந்திருக்கும். முன்பக்கமுள்ள படிகள் ஏறவும் பின்புறத்தில் இருக்கும் படிகள் இறங்கவும் பயன்படுத்தப்படும்.
பேருந்தின் முன்புறத்தில் உள்ள வாயில் வழியாகவே பயணிகள் ஏறவேண்டும். பேருந்தின் பின்பகுதியிலுள்ள பயணிகள் பின்னாலிருக்கும் வாயில் வழியாக இறங்கி விடலாம். இதனால் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நிற்கும்போது பயணிகள் ஏறி இறங்குவதற்கு ஆகும் நேரம் குறையும். அத்துடன், பயணிகளைப் பேருந்தின் பின் பகுதிக்குச் செல்ல ஊக்குவிப்பதாகவும் அமையும்.
கூடுதல் படிக்கட்டு காரணமாக பேருந்தின் மேல் தளத்தில் இருக்கைகள் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பேருந்தின் வலப்புறத்தை நோக்கிய வகையில் பக்கவாட்டில் மூன்று இருக்கைகள் அமைந்துள்ளன.
கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில் இத்தகைய மூன்று இணைக் கதவுகள் கொண்ட பேருந்துகள் வெள்ளோட்டம் விடப்பட்டன. அவற்றைப் பயன்படுத்திய பயணிகள், பேருந்தில் ஏறுவதும் இறங்குவதும் எளிதாக உள்ளது எனக் கூறி, அதற்கு நல்ல வரவேற்பு அளித்ததாகக் கூறப்பட்டது.
பயணிகள் தகவல் காட்சித் திரை போன்ற ஆணையத்தின் புதிய பேருந்துகளில் உள்ள புதிய அம்சங்கள் அனைத்தும் இப்பேருந்துகளிலும் இருக்கும்.