மருத்துவக் கல்வி, பொதுச் சேவை ஆகியவற்றுக்குத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த 104 வயது டாக்டர் ஊன் சியு செங்குக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரின் முதல் மகப்பேறு, மகளிர் மருத்துவ நிபுணர்களில் டாக்டர் ஊன்னும் ஒருவர். அத்துடன், ஓய்வுபெற்ற பிறகு 1999ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் ‘டிமென்ஷியா’ இல்லத்தை இவர் நிறுவினார்.
இவரின் அரும்பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் அதிபர் ஹலிமா யாக்கோப், இன்று (ஜனவரி 12) பல்கலைக்கழக கலாசார மையத்தில் முனைவர் பட்டத்தை அளித்தார்.
பினாங்கில் 1916ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ஊன், 1930களில் தாதியாக இருந்து, பின் 1948ல் மருத்துவர் படிப்பை முடித்தார்.
இன்று தம் இருக்கையிலிருந்து எழ அவருக்கு உதவி தேவைப்பட்டபோதும் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள தாமாக, திடமாக நின்றார்.
துன்பத்தைக் காட்டிலும் வேறு சிறந்த கல்வி இல்லை என்றும் தற்போதைய காலகட்டமே பட்டதாரி ஆவதற்குச் சிறந்த தருணம் என்றும் அவர் பட்டம் பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.