சிங்கப்பூரில் கடந்த மாதம் 30ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, இதுவரை 6,200க்கும் மேற்பட்டோர் தங்களுக்கான முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சர் கான் கின் யோங் தெரிவித்து இருக்கிறார்.
சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்திலும் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்திலும் ஏற்கெனவே இரு தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் ஹொங் கா உயர்நிலைப் பள்ளியிலும் உட்லண்ட்ஸ் கேலக்சி சமூக மன்றத்திலும் அடுத்த வாரத்தில் தடுப்பூசி மையங்கள் தயாராகிவிடும் எனக் கூறப்பட்டது.
அடுத்த மாதத்தில் மேலும் நான்கு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்றும் சிங்கப்பூர் தனது தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தும்போதும் படிப்படியாக மேலும் பல மையங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கான் கூறினார்.
இவ்வாரத்தில் தடுப்பூசி நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறிய திரு கான், நேற்று கிட்டத்தட்ட 2,800 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். எளிதாக அணுகவும் சென்றுவர வசதியாக இருக்கும்படியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதல் நான்கு தடுப்பூசி மையங்கள் இடம்பெறுவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, சீனாவின் சினொவெக் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி, சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்னரே அது பொதுமக்களுக்குப் போடப்படும் என்று அமைச்சர் கான் தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் சினொவெக் தடுப்பூசியைச் சோதித்துப் பார்த்தபோது, அது அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றைத் தடுப்பதில் 50.4% மட்டுமே செயல்திறன்மிக்கதாக இருப்பதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.
இந்த விகிதம் ஒழுங்குமுறை அனுமதிக்குப் போதுமானது இல்லை. அத்துடன், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அந்த அனுமதிக்கான விகிதத்தைக் காட்டிலும் இது மிகவும் குறைவு.
இந்நிலையில், சிங்கப்பூரில் சினொவெக் தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதுவரை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
"தரவுகள் கிடைத்த பிறகு அதைக் கவனமாக ஆராய்வோம். சினொவெக் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் அதிகாரபூர்வ தரவுகளைச் சார்ந்து இருப்பதே நல்லது," என்றார் அவர்.

