சிங்கப்பூரிலுள்ள நிதிச் சேவைகளும் மின் கட்டணச் சேவை நிறுவனங்களும் இன்று முதல் இந்நாட்டின் மத்திய வங்கி விதித்துள்ள புதிய விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். தங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களை தணிக்கைக்கு உட்படுத்தும்படி நிதி நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது.
தணிக்கைகளுக்கு உள்ளாகும் நிதி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களது மென்பொருள் நிரல்களின் மூலங்களை (source code of softwares), தீங்குநிரல்கள் (malware) மற்றும் பாதுகாப்பற்ற கணினி செயல்முறைகள் ஆகியவை குறித்து கேள்வி கேட்கப்படுவர்.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் வங்கிகளுக்கு மட்டுமின்றி கிராப்பே, சிங்டெல் டேஷ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் அண்மையில் உலகளவில் நிகழ்ந்த ‘சோலார்வின்ட்ஸ்’ இணையத் தாக்குதலை அடுத்து நாணய ஆணையம் இவ்வாறு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள சோலார்வின்ட்ஸ் நிறுவனத்தின் மீது ரஷ்ய ஊடுருவிகள் என நம்பப்படும் சிலரால் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளின் தரவுகள் அம்பலமாகியுள்ளன.