கொவிட்-19 தொற்றிலிருந்து குண மடைந்தோரிடமிருந்து பெறப்பட்ட ரத்த பிளாஸ்மா, கொரோனா கிருமி தொடர்பான முதற்கட்ட சிகிச்சை பலனளிக்காதோருக்காக ஒதுக்கி வைக்கப்படும் என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் (என்சிஐடி) நேற்று தெரிவித்தது.
கொவிட்-19க்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொண்ட ரத்த பிளாஸ்மா, கிருமித்தொற்றிலிருந்து விரைவில் குணமடைய அவர்களின் உடலில் செலுத்தப்படும்.
முதற்கட்ட சிகிச்சை பலனளிக்காதபோது, சுகாதார அறிவியல் ஆணையம், டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி ஆகியவற்றின் ஆதரவுடன் என்சிஐடி, டான் டோக் செங் மருத்துவமனையின் கண்காணிப்புத் திட்டத்தின் அடிப்படையில் ரத்த பிளாஸ்மா நோயாளியின் உடலில் செலுத்தப்படும் என்று என்சிஐடியின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷோன் வாசு தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் ஏழு பேரின் உடலில் ரத்த பிளாஸ்மா செலுத்தப்பட்டுள்ளது என்றாலும் அவற்றின் ஆற்றல் பற்றி இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
பிராணவாயு தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகளுக்கு பொதுவாக 'டெக்ஸமெத்தசோன்' எனும் ஸ்டெராய்டுகளும் 'ரெம்டெசிவிர்' எனும் ஆன்டிவைரல்மருந்துகளும் கொடுக்கப்படும்.
"கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 27 பேர் இதுவரை ரத்த நன்கொடை செய்துள்ளனர். அவர்களின் ரத்தம் ஓராண்டு வரை சேமித்து வைக்கப்படும்.
"கடுமை குறைவான கிருமித்தொற்று உள்ள நோயாளிகளின் ரத்தத்தில் நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகள் போதிய அளவில் இருக்காது. அதனால், அவர்களின் உடலுக்குப் பொருந்தக்கூடிய ரத்த நன்கொடையாளர்களைத் தேடுவதில் சிரமம் ஏற் படும். ரத்த பிளாஸ்மா பெற்ற நோயாளிகளில் யாருக்கும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை," என்றார் டாக்டர் வாசு.

