சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டங்களை ஓசிபிசி வங்கியும் கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதித் திட்ட நிறுவனமும் தனித்தனியே அறிவித்துள்ளன.
தமது வாடிக்கையாளர்களுக்கு $1 மில்லியன் பெறுமானமுள்ள தடுப்பூசி நிதியை கிரேட் ஈஸ்டர்ன் கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தமது வாடிக்கையாளர்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு அன்றாட மருத்துவமனைச் சலுகையாக $300 வழங்கப்படும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும்.
முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மருத்துவமனையில் தங்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டால் இந்தச் சலுகை வழங்கப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட தமது ஊழியர்களுக்கு அதன் காரணமாகப் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக ஓசிபிசி வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாளன்று ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஒரு வாரத்துக்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று ஓசிபிசி வங்கி கூறியது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் தனது ஊழியர்களின் இருவழி டாக்சி கட்டணத்தையும் ஓசிபிசி செலுத்தும்.
அத்துடன், பக்கவிளைவுகள் ஏற்பட்டால் கூடுதலாக இரண்டு நாள் மருத்துவ விடுப்பும் தரப்படும். அதற்கு ஊழியர்கள் மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
மலேசியா, சீனா போன்ற நாடுகளில் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதும் அங்குள்ள தனது ஊழியர்களுக்கும் இத்தகைய திட்டங்களை ஓசிபிசி வங்கி அறிமுகப்படுத்தும்.
கொவிட்-19 தடுப்பூசி பற்றி சிங்கப்பூரில் உள்ள அதன் 10,000 ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்போவதாக ஓசிபிசி வங்கி கூறியது.
இந்த விழிப்புணர்வுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமையன்று இணையம் மூலம் நடத்தப்பட்ட கருத்தரங்கு வாயிலாக தொடங்கியது.
அந்தக் கருத்தரங்கில் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவ
மனையைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கருத்தரங்கத்தில் பங்கெடுக்க ஊழியர்கள் பலர் முந்தியடித்ததாக ஓசிபிசி கூறியது.
அரை நாளிலேயே கருத்தரங்கில் பங்கெடுப்பதற்கான இடங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் கருத்தரங்கில் பங்கெடுக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது ஓசிபிசி.
விழிப்புணர்வுக் கருத்தரங்கில் 1,000 ஊழியர்கள் பங்கெடுத்தனர்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான கேள்விகளை இந்த ஊழியர்கள் தொற்றுநோய் நிபுணரிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டனர்.
ஏற்கெனவே நாள்பட்ட நோய் உள்ளவர்கள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா, தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள், தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா போன்ற கேள்விகளை ஓசிபிசி ஊழியர்கள் கேட்டு அவற்றுக்கான பதில்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் மேலும் பல இணையம் மூலம் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்று ஓசிபிசி தெரிவித்துள்ளது.
“கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக முடிவு எடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
“இருப்பினும், தரமான மருத்துவ ஆலோசனையைப் பெற்று தடுப்பூசி போடுவது குறித்து முடிவெடுக்க எங்களது ஊழியர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்,” என்று ஓசிபிசி வங்கியின் மனிதவளப் பிரிவின் தலைவர் திரு ஜேசன் ஹோ கூறினார்.
கொவிட் நெருக்கடிநிலையின்போது ஓசிபிசி வங்கி தொடங்கிய பராமரிப்புத் திட்டத்தின் விரிவாக்கமாக இந்த தடுப்பூசி ஆதரவுத் திட்டம் விளங்குகிறது.