சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய ஆடவருக்கு எதிராக நேற்று வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனியொருவராக இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் நேப்பியர் சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே சிங்கப்பூரரான 45 வயது யான் ஜுன் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை யான் ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதுகுறித்து நீதிபதி அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் பதில் அளிக்கவில்லை.
ஜோகூர் பாருவில் தாம் இருந்தபோது அமெரிக்க அரசாங்கம் தம்மை வேவு பார்த்ததாகவும் சாங்கி சிறைச்சாலை அடிமைகளுக்கான முகாம் என்றும் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலக வேண்டும் என்றும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் யான் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டத்தை அடுத்து, பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு யான் சென்றார். அங்கு அவரை போலிசார் அணுகியபோது யான் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டார் என்றும் அதனால் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதை போலிஸ் அதிகாரி வைத்திருந்த கேமராவில் காணொளி எடுக்கப்பட்டது. காணொளிப் பதிவு நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. யான் தெரிந்தே இவற்றைச் செய்ததாக மனநலக் கழகம் தெரிவித்துள்ளது.