மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள 51 மாடி கட்டடத்தின் முக்கால்வாசி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டடத்தில் உள்ள குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் 38 விழுக்காடு பரப்பளவு குத்தகைக்கு விடப்பட்
டுள்ளது என்றும், கட்டுமானம் நிறைவடையும்போது 60 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் என்றும் நம்பிக்கை உள்ளதாக இக்கட்டடத்தின் உரிமையாளர்களான கேப்பிட்டாலேண்ட் லிமிடெட், கேப்பிட்டாலேண்ட் ஒருங்கிணைந்த வர்த்தக அறக்கட்டளை, மிட்சுபிஷி எஸ்டேட் கோ ஆகியவை நேற்று தெரிவித்தன.
கேப்பிடாஸ்பிரிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் 29 மாடிகளில் அலுவலகங்கள் அமைக்கப்படும்.
பாரம்பரிய அலுவலக இடங்களுடன் நீக்குப்போக்கான இடவசதியையும் அறிமுகப்படுத்தப்படும் என்று கேப்பிடாலேண்ட் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி திரு டான் யூ சின் தெரிவித்தார்.
88 மார்கெட் ஸ்திரீட்டில் அமைந்துள்ள இந்த 280 மீட்டர் உயரமுள்ள கட்டடத்தில் சட்டம், வங்கி, நிதிச் சேவை, வாழ்க்கை பாணி வசதிகள் ஆகிய துறைகள் சார்ந்த குத்தகையாளர்களைக் கொண்டிருக்கும்.
மேலும் நான்கு மாடிகளைக் கொண்ட பசுமைத் தோட்டத்தையும் இது பெற்றிருக்கும்.
கேப்பிடாஸ்பிரிங் கட்டடத்தில் ஜேபி மோர்கன் நிறுவனம் பிரதான குத்தகைதாரராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் கட்டடத்தின் 24வது மாடியிலிருந்து 30வது மாடி வரை அமைந்திருக்கும்.
கட்டடத்தின் இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் உணவு நிலையம் அமைக்கப்படும்.
மார்க்கெட் ஸ்திரீட் உணவு நிலையத்தில் கடை வைத்திருந்தவர்கள் இங்கு தங்கள் வர்த்தகத்தைத் தொடர்வர்.
12,000 சதுர மீட்டர் பரப்பளவு சில்லறை வர்த்தகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.