நியாயமான பணியமர்த்தலுக்கும் வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கும் வர்த்தகச் சங்கங்களும் வர்த்தக, தொழிற்சபைகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனமும் 29 வர்த்தகச் சங்கங்களும் வர்த்தக, தொழிற்சபைகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், தகுதிக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களைப் பணியமர்த்தும் நடைமுறைகளுக்குத் தங்கள் கடப்பாட்டை உறுப்பியம் பெற்ற நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நியாயமான, படிப்படியான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புப் பங்காளித்துவத்தின் நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பு மற்றும் முத்தரப்பு வழிகாட்டி களைத் தாங்கள் கடைப்பிடித்து வருவதாக உறுப்பியம் பெற்ற நிறுவனங்கள் தெரிவித்தன.
ஒரு வலுவான சிங்கப்பூர் ஊழியரணியை உருவாக்கி, மேம்படுத்துவதே அதன் முக்கிய கடப்பாடு.
29 வர்த்தகச் சங்கங்களும் வர்த்தக, தொழிற்சபைகளும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய உள்ளூர் நிறுவனங்கள், சிறிய நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றைப் பிரதிநிதிக்கின்றன.
சிறிய நடுத்தர நிறுவனங்கள் சங்கம், சிங்கப்பூர் பிரிட்டிஷ் வர்த்தக சபை, சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.
"நாங்கள் மூன்று மூலக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ளோம். நேர்மறையான வேலையிட உறவுகளை மேம்படுத்துதல், நியாயமான பணியமர்த்தலைக் கடைப்பிடித்தல், வாழ்க்கைத்தொழிலில் உயர வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவையே அவை," என்று கூட்டறிக்கையில் வர்த்தகச் சங்கங்களும் வர்த்தக, தொழிற்சபைகளும் வலியுறுத்தின.
நேர்மறையான வேலையிட உறவுகளை மேம்படுத்துதல் பற்றி குறிப்பிட்ட வர்த்தகச் சங்கங்கள், வர்த்தக, தொழிற்சபைகள், "இதில் வேலை என்பது முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் உள்ள பணிக் குழுக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு.
"ஊழியர்களிடத்தில் பன்முகத்தன்மை இருப்பது புத்தாக்கத்தை, ஆக்கபூர்வமான யோசனைகளை வெளிப்படுத்த, திறமையான குழு உணர்வையும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்த விழையும் வர்த்தகங்களுக்கு முக்கியம்.
"அடுத்த முனையில், முதலாளிகள் தங்கள் ஊழியர்களுடன் இணைந்து வேலையிடச் சூழலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த முன்னுதாரணமாகக் திகழ வேண்டும்.
"பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல், தனிநபர்களை மதித்தல், பயிற்சியளித்தல், சரிசமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றை வேலையிடச் சூழல் கொண்டிருக்க வேண்டும்.
இதற்கிடையே, ஊழியர்களும் 'ஒவ்வொருநாளும் நம்பிக்கையான மனப்போக்குடன்', நேர்மறையான வேலையிடச் சூழலை உருவாக்க முதலாளிகளுடன் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டும்," என்றும் விவரித்தன.
நியாயமான பணியமர்த்தல் பற்றி குறிப்பிட்ட வர்த்தகச் சங்கங்கள், வர்த்தக, தொழிற்சபைகள், "முதலாளிகள் ஒவ்வொரு வேலைக்கும் மிகவும் தகுதியானவர்களைத் தகுதிக்கு முன்னுரிமை கொடுத்து அமர்த்த வேண்டும்," என்றும் அவை கூறின.
இறுதியாக, வாழ்க்கைத்தொழிலில் உயர வாய்ப்புகளை வழங்குதல் பற்றி குறிப்பிட்ட அவை, "முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் வாழ்க்கைத்தொழிலில் முன்னேற கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் மூலம் முன்னேறி அவர்கள் பின்னர் அதே நிறுவனத்தின் தலைமைத்துவப் பணிகளை வழங்கலாம்," என்றும் தெரிவிக்கப்பட்டது.

